நாடுகளுக்கிடையே அமைதியை அதிகரிக்க நாடகங்கள்: பாக். எழுத்தாளர்
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதியையும், நல்லுறவையும் வலுப்படுத்த நாடகங்கள் உதவும் என பாகிஸ்தான் நாடக ஆசிரியர் ஷாகித் நாதீம் தெரிவித்துள்ளார்.
ஷாகித் நதீமின் குழுவினர் தற்போது டெல்லி வந்துள்ளனர். அவர்கள் தேசிய நாடக பள்ளியில் நடக்கும் பாரத் ரங் மகோத்சவத்தில் கலந்து கொண்டு ஹோட்டல் மொகஞ்சதோரோ என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர்.
அப்போத் ஷாகித் நதீம் கூறுகையில், நாடகங்கள் மூலம் இந்தியா, பாகிஸ்தான் அரசுகளுக்கு இடையே நேரடியான நட்புறவை ஏற்படுத்த முடியாவிட்டாலும் மறைமுகமாக நட்புறவை வளர்க்க முடியும். இரு நாடுகளுக்கு இடையே அமைதியை அதிகரிக்க முடியும். இதை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நாங்கள் செய்து வருகிறோம்.
நாடகங்கள் மக்கள் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. பாகிஸ்தானில் எங்கள் நாடகங்களுக்கு பல வகையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. ஜனநாயக நாட்டில் நாடகம் எழுதி நடிப்பது சற்று கடினமானது.
சர்வாதிகார நாட்டில் சர்வாதிகாரத்தை மட்டும் எதிர்த்து நாடகமிட்டால் போதும். ஆனால் ஜனநாயக நாட்டில் பல பிரச்சினைகள் குறித்து நாடகங்கள் நடத்த வேண்டியிருக்கும். மேலும் மீடியா அதிகரித்துவிட்டதால், தற்போது நாடகம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றார் அவர்.