கிரீன்வேஸ் சாலைக்கு டி.ஜி.எஸ். தினகரன் பெயர்

இதற்கான அரசு ஆணையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதி, படுக்கையில் இருந்தபடியே கையெழுத்திட்டுள்ளார்.
இயேசு அழைக்கிறார் அமைப்பின் நிறுவனரும், கிறிஸ்தவ சொற்பொழிவாளருமான மறைந்த டி.ஜி.எஸ்.தினகரனின் முதலமாண்டு நினைவுநாள் கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
சகோதரர் டி.ஜி.எஸ்.தினகரன் மறைந்தும் மறையாமல் நம் உள்ளங்களிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இங்கே பால் தினகரன் பேசும்போது என்னை அவரது மூத்த சகோதரர் என்று குறிப்பிட்டுச் சொன்னார். அதற்கு காரணம் டி.ஜி.எஸ்.தினகரன்தான்.
சகோதரர் என்ற அந்த உணர்விலும், உரிமையிலும் நான் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன்.
டி.ஜி.எஸ். தினகரன் தமிழகத்தில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இறைபணியில் ஈடுபட்டார்.
1984-ம் ஆண்டு கோவையில் காருண்யா என்ஜினீயரிங் கல்லூரியை தொடங்கி கல்வி பணியாற்றி அத்துடன் நின்று விடாமல் பல்வேறு நலத்திட்ட பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அவரது குடும்பம் சிறுபான்மை சமுதாயத்திற்கு தொடர்ந்து அர்ப்பணித்து பணியாற்றி வருகிறது. அதற்காக அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயேசு அழைக்கிறார் அமைப்பு உள்ள சென்னை கிரீன்வேஸ் சாலைக்கு டி.ஜி.எஸ்.தினகரன் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக மாநகராட்சியில் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற முறையில் எனது ஒப்புதலும் பெறப்பட்டு அதற்கான கோப்பு முதல்-அமைச்சரின் கருணாநிதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், சாலை பெயர் மாற்றத்திற்கான கோப்பை நானே போரூர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன். சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் முதல்-அமைச்சர் கருணாநிதி அந்த கோப்பில் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கினார்.
அந்த அரசாணை இன்றைய (பிப்ரவரி 21-ந்தேதி) தேதியிட்டே வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆணையை நேரில் கொடுப்பதற்காக இங்கு கொண்டுவந்துள்ளேன்.
இனிமேல், கிரீன்வேஸ் சாலை, டி.ஜி.எஸ்.தினகரன் என்று அழைக்கப்படும் என்றார்.
பின்னர் கூட்டத்தில், முதல்வர் கருணாநிதி விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டி பால். தினகரன் சிறப்புப் பிரார்த்தனையை நடத்தினார்.
முன்னதாக, டி.ஜி.எஸ்.தினகரனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் படத்தொகுப்பை சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா வெளியிட்டார். அதை தினகரனின் துணைவியார் ஸ்டெல்லா தினகரன் பெற்றுக்கொண்டார். டி.ஜி.எஸ்.தினகரனின் பரலோக தரிசனங்கள் என்ற டி.வி.டி.யை தென்னிந்திய திருச்சபை துணை பிரதம பேராயர் ஏ.கிறிஸ்டோபர் ஆசீர் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications