தஞ்சையில் சிலுவைப் பெண்மணி!
தஞ்சை: தஞ்சை அருகே ஒரு பெண்மணிக்கு உடல் முழுக்க சிலுவை தடம் ஏற்பட்டுள்ளது. அந்த அதிசயப் பெண்மணியைக் காண மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
தஞ்சை - திருச்சி செல்லும் சாலை. அமைதி பூத்து குழுங்கும் பூங்காவாக காட்சி தருகிறது கார்மெல் கார்டன். இங்குதான் இருக்கிறார் கன்னியாஸ்திரி ரோஸி. அவரது உடல் முழுவதும் சிலுவைத் தடம் பதிந்து வருகிறதாம். மேலும் அவர் பல அற்புதங்களையும் நிகழ்த்துகிறார் என்கிறார்கள். இதை அறிந்து ஏகப்பட்ட பேர் இங்கு வந்து அவரிடம் ஆசி பெற்றுச் செல்கின்றனர்.
கடன் பிரச்சனை, குழந்தை வரம், பள்ளி, கல்லூரிகளில் தேர்வில் வெற்றி பெறுவது, வாகனம் வாங்குவது, நீதி மன்ற விவகாரம், என பல்வேறு பிரச்சனைகளுக்காக இங்கு பலர் வந்து வேண்டிக் கொண்டு செல்கின்றனர் என்று கூறப்படுகிறது. அவர்களது பிராத்தனை பலிக்கின்றது என்றும் நம்பப்படுகிறது.
தன்னை தேடி வரும் அன்பர்களுக்கு எல்லாம் கன்னியாஸ்திரி ரோஸி நல்லாசி வழங்கி வருகிறாராம். இதனால் தான் இவரது புகழ் ஜாதி, மத வேறுபாடுகளை தாண்டி, வெளி மாநிலம் வரை பரவிவிட்டதாம்.
இதனால் ஏழை எளிய மக்கள் பலர் தங்கள் நீண்ட கோரிக்கையுடன் சிஸ்டரை பார்த்து ஆசி வாங்க படை எடுத்த வண்ணம் உள்ளனராம்.
அப்படி என்னதான் அவர் அற்புதம் நிகழ்த்துகிறார் என்பதை கன்னியாஸ்திரி ரோஸியிடமே கேட்க முயன்றோம். ஆனால் அங்கிருந்த பிற கன்னியாஸ்திரிகள், உங்கள் கேள்விக்கு எங்களது ஃபாதர், பிஷப் ஆகியோரிடம் பர்மிஷன் வாங்கித்தான் பதில் சொல்ல முடியும். அதற்கு முன்பு எங்களால் எதையும் சொல்ல இயலாது என்றனர்.
இதையடுத்து ரோஸி சிஸ்டர் கை, கால்களில் எப்படி சிலுவை ஏற்பட்டது என்று அறிந்து கொள்ள கார்மல் கார்டனையும், ரோஸி சிஸ்டரை பற்றியும் நன்கு அறிந்த இன்னொரு கன்னியாஸ்திரியிடம் கேட்டோம்.
அவர் கூறுகையில், குழந்தையாக இருந்த போதே இறைவன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால் அவர் கன்னியாஸ்திரியாக மாறிவிட்டார். அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தூத்துக்குடியில் தான். அவரது பெற்றோர் தற்போது சென்னையில் உள்ளனர்.
அவருக்கு கடந்த 2005 -ம் வருடம் பெரிய வெள்ளிக் கிழமை அன்று முதலில் ஒரு கையில் சிலுவை ஏற்பட்டது. இதை எங்களது பாதர், பிஷப் ஆகியோரிடம் சொன்னோம். பின்பு அவரது கால்களில் சிலுவை ஏற்பட்டது. பின்பு உடலின் பல பகுதிகளில் சிலுவை ஏற்பட்டுள்ளது.
அதே போன்று ஒவ்வொரு பெரிய வெள்ளிக் கிழமை அன்றும் சிலுவை ஏற்பட்டு வருகிறது என்றார்.
கன்னியாஸ்திரி ரோஸியை பார்க்க திருச்சி, சேலம், கோவை, சென்னை, பெங்களூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, போன்ற வெளியூர்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் குவிந்திருந்தனர்.
அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்..
ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் விஜயராகவன் என்பவர் கூறுகையில், நான் பவானியில் வசித்து வருகிறேன். ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன். தஞ்சையில் கன்னியாஸ்திரி மேரி அற்புதங்கள் செய்வதாக கேள்விப்பட்டேன். அதனால் நான் அவரிடம் ஆசி பெற வந்துள்ளேன் என்றார்.
கரூரைச் சேர்ந்த தொழில் அதிபர் சத்தியநாதன் என்பவர் கூறுகையில், ஏசுவை சிலுவையில் அறைந்த போது அவரைது கை, கால்களில் ஆணி வைத்து அறைந்தனர். அத்தோடு விடாமல் அவர் இறந்து விட்டாரா என்று அறிய அவரது விலாவிலும் ஈவு இரக்கம் இன்றி ஈட்டியால் குத்தினார்கள். அப்போது, ஈட்டியால் குத்தியவர்கள் முகத்தில் இரத்தமும், நீரும் அடித்தது.
அதனால் ஏசுவுக்கு இரண்டு கைகளிலும், கால்களிலும், விலா எழும்புகளிலும் காயங்கள் ஏற்பட்டு அவைகள் சிலுவை போன்ற தழும்பாக மாறியது.
அந்த திருக்காயங்கள் தான் உலகில் நடக்கும் தீமைகளிடம் இருந்து மக்களை தற்போது காப்பாற்ற உதவுகிறது. மேலும், மனிதன் செய்த பாவ செயல்களில் இருந்து காப்பாற்றப்படுவதாக கிறிஸ்துவ மக்கள் நம்புகின்றனர் என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.
பெருந்துறையை பூர்வீகமாக கொண்ட செல்வராஜ் என்பவரிடம் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டபோது, சார், எனக்கு சாமி கும்பிடும் பழக்கம் எல்லாம் இல்லை. ஆனால் சில நேரங்களில் சில விஷயங்களுக்காக கோவிலுக்கு செல்வதுண்டு. எனக்கு வேண்டியப்பட்ட ஒருவர் மூலம் இந்த சிஸ்டர் செய்யும் அற்புதங்கள் பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்தேன். அவரிடம் ஆசி பெற்றேன். நான் பல மாதங்களாக நினைத்து நடைபெறாத காரியங்கள் எல்லாம் தற்போது நடைபெற்றது. அவைகளை வெளியே சொல்ல முடியாது. அதனால் வெளியே சொல்ல விருப்பமும் இல்லை என்றார்.
ஆச்சரியம்தான்..