கோவிலுக்கு அருகே சார்லி சாப்ளின் சிலை - இந்து அமைப்பு எதிர்ப்பு
ஹாலிவுட் காமெடி நடிகர் சார்லி சாப்ளின். உலகப் புகழ் பெற்ற சாப்ளினுக்கு இனம், மொழி பேதம் இல்லாமல் உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இவரது சிலையை உடுப்பி, பைந்தூர் அருகே உள்ள ஓதினானே என்ற இடத்தில் நிறுவன கன்னட திரைப்பட இயக்குநர் ஹேமந்த் ஹெக்டே திட்டமிட்டார்.
அங்குள்ள சோமேஸ்வரர் கோவிலுக்கு அருகில் சார்லி சாப்ளினின் 67 அடி உயர சிலையை வைக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணி கடந்த 5ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் இந்த சிலைக்கான பணிகள் தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்துக் கோவிலுக்கு அருகில் கிறிஸ்துவரான சார்லி சாப்ளினின் சிலை அமைக்கப்படுவதால் இந்துக்களின் மனது புண்படுத்தப்படுகிறது என இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
நேற்று முன்தினம் சுரேஷ் பட்வாடி என்பவர் தலைமையில் வந்த இந்து அமைப்பினர் சிலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து ஹேமந்த் ஹெக்டே கூறுகையில், இந்து அமைப்பினரின் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது. இவர்களிடம் சார்லி சாப்ளின் போன்ற தலைசிறந்த கலைஞர்களுக்கு கூட மரியாதை கிடைப்பதில்லை.
இம்மாவட்டத்துக்குள் இந்த சிலையை நிறுவ நினைத்ததால் அதை உடைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
உடுப்பி மாவட்ட போலீஸ் கமிஷ்னர் அனுமதி அளித்த போதும் பணிகளை தொடர தயக்கமாக இருக்கிறது. ஒரு புகழ் பெற்ற காமெடி நடிகரின் சிலை கலவரமான சூழ்நிலையில் உருவாக கூடாது.
சிலையை வேறு இடத்திற்கு மாற்ற யோசித்து வருகிறேன். அனேகமாக பெங்களூரில் சிலையை நிறுவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். திரையுலகினருடனும் ஆலோசனை செய்வேன் என்றார்.