11வது நாளாக தொடரும் பெண்கள் உண்ணாவிரதம்
பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே ஐந்து பெண்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 6 பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சற்றும் கவலைப்படாமல் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த 13ம் தேதி தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகம் வளாகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பேராசிரியை சரஸ்வதி (இவர்தான் கூட்டமைப்பின் தலைவர் ஆவார்), வழக்கறிஞர் பாண்டிமாதேவி, பழனியம்மாள், லித் வின் மேரி, பிலோமினா, பொன்னுத்தாய் ஆகிய 6 பேருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
உயிரே போனாலும் பரவாயில்லை. போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனால் பதட்டத்துடன் உண்ணாவிரதம் நீடிக்கிறது.
நேற்று இயக்குநர் தங்கர்பச்சான், நடிகை ரோகிணி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த பெண்களை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.