ஜன. 24ம் தேதி பெண் குழந்தைகள் தினம்: அரசு முடிவு
டெல்லி: பெருகி வரும் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி 24ம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய மகளிர் மற்றும் சிறார் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், பெண் சிசுக் கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளுக்கு சுகாதாரம், சத்துணவு, கல்வி, வேலைவாய்ப்பில் சமத்துவம் இல்லாத நிலை உள்ளது.
இதை குறைக்கவும், முற்றாக ஒழிக்கவும், பெண் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆண்டு தோறும் ஜனவரி 24ம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்க அரசு தீர்மானித்துள்ளது.
மேலும், பெண் குழந்தைகளுக்கான எதிரான பாரபட்சத்தைப் போக்கும் பிரசாரத்தை ஜனவரி 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்கள் குறித்து இந்த பிரசாரத்தின்போது விளம்பரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.