சித்திரை விழா-மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்
மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சிகையாக நடைபெற்றது. பக்தர்கள் ஆயிரகணக்கில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனும், சுந்தரேஸ்வரும் பல வாகனங்களில் வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர்.
இம்மாதம் 3ம் தேதி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 5ம் தேதி திருக்கல்யாணமும் நடந்தது. இந்நிலையில் 11ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
அதிகாலை 3.30 மணிக்கு கோவிலில் உள்ள பழைய மண்டபத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை ஆகியோருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களுக்கு ரதரோஹணம் பூஜை செய்தனர்.
தேர்களை பாதுகாத்துவரும் தேரடி கருப்பசாமிக்கு அதிகாலை 5 மணிக்கு பூஜை செய்து மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் ஆகியோரை தேர்களில் எழுந்தருள செய்தனர். பின்னர் தேர் காலை 6.05 மணிக்கு புறப்பட, தேரோட்டம் ஆரம்பமானது.
தேருக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட மூன்று யானைகள், 1 காராம் பசு, 2 ஓட்டகங்கள் சென்றன. அதன் பின்னால் விநாயகர், முருகன், நாயன்மார்களின் சப்பரங்கள் அணி வகுத்து வந்தன.
ஆயிரக்கண்க்கில் பக்தர்கள் திரண்டு உற்சாகமாக வடம் பிடித்து இழுக்க நான்கு மாசி வீதிகளில் வலம் வந்த தேர் காலை 11 மணிக்கு நிலைக்கு வந்தது.
கடந்த 10 நாட்களாக இருவரும் தனித்தனி வாகனங்களில் உலா வந்தனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காக நேற்றிரவு 7.30 மணிக்கு இருவரும் ஏழு வண்ணங்களை கொண்ட சப்தவர்ண சப்பரத்தில் உலா வந்தனர்.
சித்திரைத் திருவிழா நாளை நிறைவு...
பின்னர் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. 12வது நாளான இன்று பொற்றாமரைக் குளத்தில் தேவேந்திர பூஜையுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications