ஜெ பேச்சு. எங்கள் மூச்சு-திலீபன் தமிழ்ச்சோலை
பாலெர்மோ: தனி ஈழம் அமைப்பேன் என்ற அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் பேச்சு, தங்களது உயிர்மூச்சு என இத்தாலி திலீபன் தமிழ்ச்சோலை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
பேரன்புக்குரிய ஜெயலலிதா அம்மாவுக்கு,
தாயுள்ளமும் தாய்நெஞ்சமும் கொண்ட ஒருவரால் தான் எமது தாயகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும். இந்த கோரப் போரினால் ஏற்படக் கூடிய வலியை புரிந்து கொள்ள முடியும்.
ஐந்து சகாப்தங்களுக்கு மேலாக எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டம் தொடர்கிறது. தந்தை செல்வநாயகம் முதலாக மூத்த தலைவர்களால் சாத்வீக வழியிலான போராட்டங்கள் கைகொடுக்காது போகவே ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதை தாங்கள் அறிவீர்கள்.
ஈழத்தமிழர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு முன்வைக்கப்படாதவரை எமது மக்களின் அவல வாழ்வை யாரும் நிறுத்த முடியாது. எமது நிம்மதியான வாழ்க்கைக்கு எமது தாயகம் ஒன்றுதான் தீர்வாக இருக்கும்.
எமது தேச விடுதலை போராட்டத்தின் முழுமையான நியாயப்பாட்டை உணர்ந்தவர் புரட்சி தலைவர் அவர்கள். அவர்களால் உருவாக்கிய அதிமுகவின் பொது செயலாளர் என்ற காரணத்தினால் எமது விடுதலை பயணத்தில் தங்களுக்கும் கணிசமான பங்குண்டு.
சில அரசியல் காரணங்கள் சிலவேளை தங்களையும் எங்களையும் தள்ளியிருக்க வேண்டிய சூழலை உருவாக்கி தந்திருக்கலாம், நடந்தவை கடந்தவை.
ஈழத்தமிழர் வரலாற்றில் தங்களின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் காலம் தொலைவில் இல்லை என்பது ம்டடும் புரிகிறது. இன்றைய உலகில் ஆதிமனித வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது எங்களின் இனம்தான் என்பதை உணர்வீர்கள்.
மகப்பேறின் போது சிசுவின் காலில் கருவிலேயே குண்டு தாக்கி இருப்பதும் எங்கள் மண்ணில் தான். கூட்டங் கூட்டமாக கொசுக்களை கொல்வது போல் எங்கள் உறவுகளைக் கொல்வதும் எங்கள் மண்ணில் தான்...
உலகத்தின் கவனமின்றி ஒரினம் இந்த உலக வரைபடத்தில் இருந்து மெது மெதுவாக அகற்றப்பட்டு கொண்டிருக்கிறது. காப்பாற்ற யாருமற்ற ஒரு தவிப்பில் தவித்து கொண்டிருந்தோம் தங்களின் உயர்வான பேசசு, எங்களுக்கு உயிர் மூச்சு.
எங்களுக்கான குரலாக தங்களின் குரல் ஒலித்தவை கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். பாரத தேசத்திற்கும் ஈழதேசத்திற்குமான பாலமாக நீங்கள் இருப்பது எங்களுக்குப் பெருமை.
அரசியல் லாபமற்ற தூய்மையான ஒருவராக நாங்கள் தங்களை ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் நம்பிக்கைக்கு அரசியல் சாயம் பூசிவிடாதீர்கள்.
எங்களுடைய நீண்டநாள். கனவை நிலை நிறுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். வரும் தேர்தலில் எங்கள் கூட்டணி வெல்லவும், எங்கள் தேசம் மலரவும் துணையாக இருங்கள். துணிவோடு போராடுவோம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications