ஜெ. வராலாற்று நாயகி-அமெரிக்க அமைதிகாண் அமைப்பு
ரெய்லே: தனி ஈழம் அமைப்பேன் என தீர்க்கமாக கூறிய அதிமுக பொது செயலாளர் ஈழ வரலாற்று நாயகியாக திகழ்வார் என வட கரோலினா அமைதிகாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் தா. சிவராஜ், ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில்,
அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு,
அமெரிக்காவிலிருந்து வடக்கு கரோலினா மக்களின் அமைதிகாண் அமைப்பின் சார்பில் எமது நல்வாழ்த்துக்கள்.
வீடிழந்து. நாடிழந்து. மறைந்திருந்த காடுமிழந்து நாளும் மரணத்துக்குள் வாழத்துடிக்கிறார் நம் ஈழத்தமிழவர். சிங்களத்து சிறிலங்கா அரசு அவர்களை 5 சதுர மைல் திறந்தவெளியில் முடக்கி நரவேட்டையாடுகிறது.
உலக நாடுகளின் அழுத்தங்களையும் மனித உரிமை அமைப்புகளின் உருக்கமான வேண்டுகோள்களையும் உதாசீனம் செய்தவண்ணம் இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது சிறிலங்கா அரசு.
ஈழத்தமிழினத்தின் இழவுநிலைகண்டு உலகத்தமிழினம் கையறுநிலையில் பரிதவித்த வேளை இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித்தமிழ் அறிவிப்பு வெளிவந்து எம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது.
ஈழத்தில் நடப்பது இனப்படுகொலை என்பதைத் தெளிவாக தெரிந்துகொண்டு தனித் தமிழீழமே உரிய தீர்வு என்று தீர்க்கமாக நீங்கள் எடுத்த முடிவு ஒரு பெரிய வரலாற்று நிகழ்வு. இதனால் மகிழ்ந்த தமிழ்கூறும் நல்லுலகம் உங்களை வாழ்த்தி நிற்கிறது.
தனித் தமிழீழம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு இரண்டகம் விளைவிக்க மாட்டாது. மாறாக, இந்திய தேசத்தின் தென்காப்பரணாகவும், நேசநாடாகவும் அது காலாகாலமாக நிலை கொள்ளும். அதை உருவாக்க உழைக்கும் வரலாற்றுப் பெருமைக்கு நீங்கள் சொந்தக்காரர்.
உங்கள் நிலைப்பாட்டை இங்கு நமது அமெரிக்க அரசுக்கு அமெரிக்க தமிழர்கள் நாம் எடுத்து சொல்லியுள்ளோம். அதிபர் ஒபாமாவின் கொள்கை வகுப்பில் உங்கள் நிலைப்பாடு முக்கிய பங்கு வகிக்க உள்ளதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
எண்ணித் துணிக கருமம் - துணிந்தபின்
எண்ணுவ மென்பது இழுக்கு
என்ற வள்ளுவன் வாக்குப்படி, நீங்கள் சிந்தித்து தீர்மானித்து எடுத்து தெளிந்த முடிவுடன் தமிழ் ஈழம் அமைப்பதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் அயராது உழைக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கிறோம். வரலாற்று நாயகியாக நீங்கள் வாழ்வீர்கள் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.