கோவையில் சர்வதேச குழந்தைகள் மாநாடு - அப்துல் கலாம் பங்கேற்பு
கோவை: ஆகஸ்ட் 7 முதல் 12 ம் தேதி வரை கோவையில் நடைபெற உள்ள சர்வதேச குழந்தைகள் மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்க உள்ளார்.
ஆகஸ்ட் 7 முதல் 12 ம் தேதி வரை கோவையில் சர்வதேச குழந்தைகள் மாநாடு நடைபெறுகிறது.
சாந்தி ஆசிரமம், கோவை பாரதிய வித்யா பவன், குமரகுரு தொழில்நுட்பக்கல்லூரி ஆகியன, கோவையின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இம் மாநாட்டை
நடத்துகின்றன.
இது குறித்து சாந்தி ஆசிரமம் இயக்குநர் வினு அறம் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது வரை ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே நடத்தப்பட்ட இம் மாநாடு முதன்முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்தும், 20 நாடுகளில் இருந்தும் இளம் பருவத்தைச் சேர்ந்த 700 பேர் பங்கேற்க உள்ளனர். மேலும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 2,500 பேர் கலந்து கொள்கின்றனர்.
இளம் பருவத்தினரிடையே ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவ எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்றும், உலக அமைதி, சமாதானம் போன்ற உயர்வான லட்சியங்களை அடைவதற்கான எண்ணங்கள், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும்
மத மற்றும் கலாசார வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு சமூக முன்னேற்றத்துக்கு உதவுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இம் மாநாடு நடத்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, வறுமை ஒழிப்பு, எச்ஐவி எய்ட்ஸ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமய நல்லிணக்கம் போன்றவை குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
மாநாடு நிறைவு நாள் அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்க உள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications