நாளை மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம் - தாமிரபரணியில் நாளை அஞ்சலி
நெல்லை: நெல்லையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பலியான தினத்தையொட்டி அரசியல் கட்சியினர் தாமிரபரணி ஆற்றில் நாளை அஞ்சலி செலுத்தவிருப்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 99ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி கூலி உயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றபோது கலவரம் ஏற்பட்டது.
போலீசார் தடியடி நடத்தினர். இதில் போலீஸாருக்குப் பயந்து தாமிரபரணி ஆற்றில் தொழிலாளர்கள் குதித்தனர். அதில், 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி புதிய தமிழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தனிதனியாக தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தாண்டு 16 அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், நெல்லை தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் அஞ்சலி செலுத்த தனித்தனி நேரம் ஓதுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நெல்லை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றங்கரை, ரயில்வே நிலையம், தலைவர்கள் சிலைகள், கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications