மாறிப் போன 'மாதிரி' காவல் நிலையம்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஐ.நா. சபை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 'மாதிரி காவல் நிலையம்', மற்ற எல்லா சாதாரண காவல் நிலையங்களைப் போலவே செயல்பட்டு வருகிறது. ஆனால், அதன் போர்டு மட்டும் 'யு.என்.டி.பி. மாதிரி காவல் நிலையம்' என்ற விளம்பரத்தைத் தாங்கி நிற்கிறது.
விழுப்புரம் மேற்கு காவல் நிலையமும், உளுந்தூர்பேட்டை காவல் நிலையமும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஐ.நா. சபை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாதிரி போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டன.
இக் காவல் நிலையங்களுக்கு வாகனங்கள் வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய சில போலீஸார் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குற்றப் புலனாய்வில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பின்னர் புலனாய்வுக்குத் தேவைப்படும் நவீன கருவிகள் வாங்கவும் நிதியுதவி தரப்பட்டது.
இவ்வாறாக ஐ.நாவின் நிதியால் மேம்படுத்தப்பட்ட விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து சராசரி காவல் நிலையமாக மாறிவிட்டது.
மேலும் இத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்பட்ட அதிகாரிகள், போலீஸாரும் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்று வேறு இடங்களுக்குப் போய்விட்டனர்.
பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு இக் காவல் நிலையத்துக்கு புதிதாக வருபவர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்படவில்லை.