உயிரோடு இறுதி சடங்கு-திண்டுக்கல்லில் வித்தியாச திருவிழா
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கோவில் திருவிழாவில் உயிரோடு உள்ளவருக்கு இறுதிச் சடங்கு நடத்தும் வித்தியாசமான திருவிழா வெகு விமர்சிகையாக நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே ஆலத்தூரான்பட்டியில் செல்வ விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் திருவிழா நடைபெறும்.
விழா காலத்தில் இப்பகுதியில் இறப்பு போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க, மஞ்சள் நீராடலுக்கு முன் உயிருள்ள நபர் ஒருவருக்கு சவ ஊர்வலத்துடன் இறுதிச் சடங்குகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கடந்த 1994ம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு தான் விழா நடக்கிறது. விழா கடந்த ஜூலை 28ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. இந்த விழாவில், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது.
முன்னதாக இக்கிராமத்தில் புளியந்தோப்பு பகுதியில், கொள்ளாயிரம் (87) என்பவருக்கு இறந்தவரைப் போன்று அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு, நீர்மாலை எடுத்தல், தேரில் அமர்த்தி ஊர்வலமாக எடுத்து வருதல் போன்ற சடங்குகள் நடைபெற்றது.
மேலும், அவரது மனைவி போல நடித்த நபருக்கு பூ, வளையல், தாலி ஆகியவற்றை களையும் நிகழ்ச்சி நடந்தது. பூஞ்சோலை வரை ஊர்வலம் நடத்தப்பட்டு, அங்கு கொள்ளாயிரம் அலங்காரம் கலைத்து தனது வீடு திரும்பினார்.
குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே, இறந்தவர் போல நடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கொள்ளாயிரம் 3வது முறையாக இந்த விழாவில் சவமாக ஊர்வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளாயிரம், 'தொள்ளாயிரம்' ஆண்டுகள் வாழ வாழ்த்துவோம்!












Click it and Unblock the Notifications