செப்டம்பர் 26ல் சனிப்பெயர்ச்சி-திருநள்ளாறில் விழா ஏற்பாடுகள்
திருநள்ளாறு: வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ள்ளது. அன்றைய தினம் சனீஸ்வர பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார்.
சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பார். இந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.27 மணிக்கு சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதையொட்டி புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடக்கவுள்ளது.
அன்று சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன.
இந்த கோவிலில் மட்டும் தான் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. தோஷ நிவர்த்திக்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா வருவதால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகளவில் பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி திருநள்ளாறில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கவும் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.