உ.பியில் வழிபறி கொள்ளையனுக்கு சிலை!
பகோதி: உத்தர பிரதேச மாநிலத்தில் வழிபறி கொள்ளையன் ஒருவனுக்கு சிலை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலையை அந்த கொள்ளையனே தனது வீட்டு வாசலில் திறக்க முடிவு செய்துள்ளான்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய நகரை சேர்ந்தவர் ஜெகன்நாத் பின்த். இவர் மீது வழிபறி கொள்ளையில் ஈடுபட்டது உள்பட 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
உத்தர பிரதேசத்தில் அவர் போகாத சிறை இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாரனாசி, பதோகி, அலகாபாத், மிர்சாபூர் என அனைத்து முக்கிய சிறைகளிலும் அடைக்கப்பட்டு இருந்திருக்கிறார்.
பின்னர் வாழ்க்கை பாதையை மாற்றி கொண்ட அவர் 1980ல் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. பி்ன்னர் 1987ல் அந்த கிராமத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இன்று வரை அவர் தான் கிராமத்தின் தலைவர்.
தற்போது அவர் தனக்கு தானே சிலை திறந்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். தனது வீட்டு வாசலில் சுமார் ரூ. 50 ஆயிரம் செலவில் 6 அடி உயரத்துக்கு சிலை அமைத்து வருகிறார். இதற்கு உள்ளூர் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அதையெல்லாம் மனிதர் கண்டு கொள்ளவில்லை.
இது குறித்து அவர் கூறுகையில்,
வீட்டுக்கு வெளியே எனது சிலையை அமைத்து வருகிறேன். மறைவுக்கு பின்னர் மக்கள் என்னை மறந்துவிட கூடாது என்பதால் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இது சிமென்ட் சிலை.
தற்போது உபியில் பலரும் தங்களது சிலையை தாங்களே திறந்து வைத்து கொள்வதால், நானும் உயிருடன் இருக்கும் போதே எனது சிலையை பார்க்க ஆசைப்படுகிறேன்.
நான் வால்மீகி போல்...
ராமாயணத்தை எழுதிய வால்மீகி கூட துவக்கத்தில் கொள்ளையராக இருந்தவர் தான். பின்னர் மனம் மாறி பெரும் முனிவராக மாறவி்ல்லையா. வால்மீகி மாறிய போது இந்த ஜெகன்நாத் பின்த்தால் மாற முடியாதா...
என் வீ்டடின் முன்பு சிலையை கட்டி வருகிறேன். இதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி செய்தால் நீதிமன்றத்தில் முறையிடுவேன். இதன்மூலம் கொள்ளையன் என்ற எனது அடையாளம் மறைந்துவிடும் என்றார்.