75வது ஆண்டு விழா காணும் மேட்டூர் அணை
மேட்டூர்: பல லட்சம் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையின் ஒளியாய் திகழ்ந்து வரும் மேட்டூர் அணை இன்று தனது பவள விழாவை கொண்டாடுகிறது.
மேட்டூர் அருகில் இருக்கும் சீதா மலைத்தொடர் மற்றும் சோனாங்கரடு ஆகிய பகுதிகளுக்கு இடையே கட்டப்பட்ட அணை தான் மேட்டூர் அணை.
1925, ஜூலை மாதம் துவங்கிய இந்த கட்டுமான பணிகள் கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பின் 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. அந்த காலத்திலே ரூ. 4 கோடியே 8 லட்சம் செலவு செய்து கட்டப்பட்டது.
இந்த அணையின் மூலம் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 16.5 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த 11 மாவட்டங்களும் தங்களது குடிநீர் தேவைக்கும் இந்த அணையை தான் நம்பியுள்ளன.
சுமார் 125 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 120 அடி வரை நீர் தேக்க முடியும். மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி. இதுவரை மேட்டூர் அணை 36 முறை முழுமையாக நிறைந்துள்ளது.
இதிலிருக்கும் தண்ணீரின் மூலம் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அணையின் மேல் இதுவரை இரண்டு வரை இடி தாக்கியுள்ளது. என்றாலும் எந்த சேதமும் இல்லாமல் நிமிர்ந்து நிற்கிறது. 75வது ஆண்டு விழாவான இன்று அணை 99 அடி நீருடன் கடல் போல் காட்சியளிக்கிறது.