வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலைய விழா - நாளை தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவுக்கு திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழா குறித்து பேராலய அதிபர் மைக்கேல் அடிகள், பங்குதந்தைகள் ஆரோக்கியதாஸ், தார்சிஸ்ராஜ், டி.எஸ்.முத்துசாமி, உதவிபங்குதந்தைகள் ஜான்சன் எட்வர்ட், தாஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,
வேளாங்கண்ணி புனித ஆராக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா இந்த ஆண்டு வருகிற 29-ந் தேதி, சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று மாலை 6 மணிக்கு புனித ஆரோக்கிய ஆன்னையின் உருவம் பொறித்த கொடி பவனி நடக்கிறது. அன்னையின் கொடி பேராலய முகப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரை சாலை, ஆரியநாட்டுத்தெரு, வழியாக சென்று பேராலயத்தை அடைகிறது.
தொடர்ந்து பேராலயத்தில் தஞ்சை ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்து கொடியேற்றுகிறார். கொடியேற்றப்பட்டு 10 நிமிடங்களுக்குப் பின் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி ஆகியவை நடக்கிறது.
நவநாட்களில், பேராலயத்தில் காலை 5 மணிக்கு தமிழில் திருப்பலியும், திருப்பலி முடிவில் அன்னையின் திருச்சொரூப ஆசீரும், நோயாளிகளை மந்திரித்தலும் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு திருப்பலி, மாதா சுரூப ஆசீரும், இரவு 8 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது. தேர்பவனி பேராலய முகப்பில் இருந்து ஜெபத்தோடு தொடங்கப்பட்டு கடற்கரை சாலை வழியாக சுற்றி வந்து மீண்டும் ஆலயத்தை அடையும்.
செப்டம்பர் 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு பெரிய தேர்பவனி நடைபெறுகிறது. அப்போது வாணவேடிக்கை நடைபெறும்.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்னையின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு திருநாள் சிறப்பு கூட்டுத்திருப்பலியும், மாலை 6 மணிக்கு அன்னையின் கொடி இறக்கப்படுதலும், 6.15 மணிக்கு பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு நற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது என்றனர்.
பன்றிக் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள்...
வேளாங்கண்ணித் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வரவுள்ளதால் பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்காக சிறப்பு முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன.
வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கட்டாயம் பன்றிக் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படுள்ளன.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக அறியப்படுவோர் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
வேளாங்கண்ணி விழாவுக்கு வருவோருக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.