நாடு கடந்த தமிழீழ அரசுக்கு கனடா படைப்பாளிகள் கழகம் ஆதரவு
டொரன்டோ: இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்கும் செயல்குழுவுக்கு கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக அரசியல் - ராசதந்திரக் களங்களில் முன்னெடுக்க இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சட்டவாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவுக்கு எமது கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழினப் படுகொலை ஒன்றை பகிரங்கமாக அரங்கேற்றிய சிங்கள - பவுத்த இனவாத சிறிலங்கா அரசின் முக மூடியைக் கிழித்து தமிழ்மக்களின் தன்னாட்சி உரிமையை வென்றெடுக்கும் பணியில் புலம் பெயர் தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒன்று திரட்ட இடைக்கால நாடுகடந்த அரசு வழி சமைக்கும் என மனதார நம்புகிறோம்.
தமிழீழ மக்கள் பாதுகாப்புடனும் மானத்தோடும் சுதந்திரத்தோடும் வாழ வேண்டுமென்றால் அவர்களுக்கு ஒரு தன்னாட்சி உரிமை படைத்த தனியரசு உருவாக வேண்டும். அதற்கான ஆணையை தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டு முதல் நடந்த தேர்தல்கள் மூலம் வழங்கியுள்ளார்கள்.
இனச் சிக்கலுக்கான எந்தத் தீர்வும் வரலாற்றுப் புகழ்பெற்ற
வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு பேச்சு வார்த்தையின் போது தமிழர் தரப்பு முன்வைத்த தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்மக்களின் ஒருமனதான வேட்கையாகும்.
யூதர்கள் எப்படி உலக யூத காங்கிரஸ் மூலமாக தமது அரசியல், ராசதந்திர வேட்கைகளை ஒரே குரலில் பேசுகிறார்களோ அதே போல் புலம்பெயர் தமிழர்களும் ஒரே குரலில் பேச வேண்டும். எனவே இந்த வரலாற்றுப் பணியில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உள்ளத் தூய்மையோடு செயலாற்றுவோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.