பல ஆண்டு பிரிந்திருந்தால் 'டைவர்ஸ்'-சுப்ரீம் கோர்ட்
டெல்லி: கணவன், மனைவி இருவரும் பல ஆண்டுகள் பிரிந்திருந்தால் போதும் அவர்களுக்கு விவாகரத்து வழங்கலாம் என உசச் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா பகுதியை சேர்ந்தவர் அனில் ஜெயின். இவருக்கு மாயா ஜெயின் என்பவருக்கும் கடந்த 1985ம் ஆண்டு திருமணம் முடிந்தது. ஆனால், திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலே இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அனில் தனது மனைவி பெயரில் சில சொத்துக்களை எழுதி வைப்பதாக கூறி, அவரிடம் விவாகரத்து கேட்டார். அவரும் சம்மதிக்கவே இருவரும் மனம் ஒத்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னதாக விவகாரத்துக்கு விண்ணப்பித்தனர்.
இதையடுத்து குடும்ப நல நீதிமன்றம் 13 பி பிரிவின் கீழ் விவகாரத்து வழங்க முடிவு செய்தது. ஆனால், அதற்கு முன்னதாக கணவன், மனைவி இருவரும் 6 மாதம் பிரிந்து வாழ வேண்டும் என்றும், அதன் பின்னர் நீதிமன்றத்தில் பிரிய சம்மதம் தெரிவித்தால் விவகாரத்து வழங்கப்படும் என்றார்.
ஆனால், 6 மாதம் முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் அந்த பெண் தனக்கு விவகாரத்தில் விருப்பமில்லை என கூறிவிட்டார். நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது. இதனால் அனில் ஜெயின் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அல்த்மாஸ் கபிர், சிரயாக் ஜோசப் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில்,
ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் தனியாக வாழும் சமயத்தில், அதில் ஒருவர் மற்றொருவருக்கு விவாகரத்து வழங்க மாட்டேன் என சொல்வதை ஏற்று கொள்ள முடியாது.
இதையடுத்து நீதிமன்றம் 142வது ஷரத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அந்த பெண் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ வேண்டும் என விரும்புகிறார். ஆனால், விவாகரத்து கொடுக்க அவருக்கு விருப்பமில்லை. இது ஏற்று கொள்ளதக்கதல்ல.
பல ஆண்டுகளாக பிரிந்து வாழும் கணவன், மனைவிக்கு விவகாரத்து கொடுக்கலாம் என்றார்.