முதியோர் இல்லங்களுக்கு மத்திய நிதி கோரும் அரசு
டெல்லி: தமிழக அரசு முதியோர் நலனுக்காக மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ரூ. 112 கோடியில் அமையவுள்ள முதியோர் சுகாதார ஆய்வு மையம் (Geriatrics research centre), முதியோர் இல்லங்கள், முதியோர்களுக்கான தற்காலிக தங்கும் விடுதிகள் ஆகியவற்றை கட்ட மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் நடந்த அனைத்து மாநில சமூக நலத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் கீதா ஜீவன் இந்தக் கோரிக்கையை வைத்தார்.
கீதா ஜீவன் பேசுகையில், சென்னையில் ரூ. 112 கோடி மதிப்பீட்டில், முதியோர் சுகாதாரம் தொடர்பான ஆய்வுகள், சிகிச்சைகள் உள்ளிட்டவற்றை வழங்க வகை செய்யும் தேசிய முதியோர் சுகாதார ஆய்வு மையத்தை தமிழக அரசு அமைக்கவுள்ளது.
இங்கு முதியோருக்கான அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் கிடைக்கும். மேலும், இந்த மையம் அதி நவீன மருத்துவமனையாகவும் இயங்கும். முதியோர்களுக்காகவே இந்த சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளது.
மத்திய அரசு உதவியுடன் இந்த மையத்தை தமிழக அரசு அமைக்கும்.
அதேபோல தமிழகத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் 27 முதியோர் இல்லங்கள் மாநில அரசு உதவியுடன் நடத்தப்படுகின்றன.
மேலும், 49 முதியோர் இல்லங்கள், 17 பன்முக சேவை மையங்கள், 6 நடமாடும் மருத்துவப் பிரிவுகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் மத்திய அரசின் உதவியோடு நடத்தி வருகின்றன. இந்தத் திட்டங்களுக்கான நிதியுதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் முதியோர் இல்லங்களைத் தொடங்க தமிழக அரசு ஆர்வமாக உள்ளது. நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டன. முதல் நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில், 10 ஏக்கர் நிலப்பரப்பில் மாதிரி முதியோர் இல்லம் தொடங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லங்கள், முதியோர்களுக்கான தற்காலிக தங்கும் விடுதிகள் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், தமிழக அரசு காது கேளாத சிறார்கள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான மையங்களை மாநில அரசு என்ஜிஓக்களின் உதவியுடன் அமைத்துள்ளது. இது அரசு - தனியார் கூட்டுச் செயல்பாட்டுக்கு சரியான முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றார் கீதா ஜீவன்.