இறந்த பின் செய்யும் தானம் கண்தானம் மட்டுமே-நெப்போலியன்
திண்டுக்கல்: உயிருடன் இருக்கும் போது பணம், பொருள் ஆகியவற்றை நாம் தானம் செய்ய முடியும். ஆனால், இறந்த பின்னர் நம்மால்க ண்தானம் மட்டுமே செய்ய முடியும் என மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் மாற்றுத்திறன் உடையோருக்கான உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் வள்ளலார் தலைமையில் நடந்தது.
இதில் மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் கலந்து கொண்டு பேசுகையில்,
இந்தியாவில் முதன்முறையாக நடக்க இயலாத, தசைத்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பள்ளி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதிற்குள் குழந்தைகளின் பேச்சு, கேட்கும் திறனை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப சிகிச்சை முறைகளை வழங்கினால் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கி தரமுடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுள்ள குழந்தைகள் நலனுக்காக, சென்னை முட்டுக்காட்டில் தேசிய நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்தியாவில் 2 கோடியே 19 லட்சம் பேர் மாற்றுத்திறன் உடையவர்களாக உள்ளனர். இவர்களில் ஒரு கோடியே 6 லட்சம் பேர் கண்பார்வை இல்லாதவர்களாவர். ஆனால், ஆண்டிற்கு 30 ஆயிரம் பேர் மட்டுமே கண்தானம் செய்கின்றனர். அனைவருக்கும் பார்வை வழங்குவது பார்வை உள்ளவர்களின் கையில் தான் உள்ளது.
உயிருடன் இருக்கும்போது பணம், பொருள் ஆகியவற்றை நாம் தானம் செய்ய முடியும். ஆனால், இறந்த பின்பு நாம் செய்வது கண்தானம் மட்டுமே. அதை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றார்.