செம்மொழி மாநாடு வெற்றி பெற கருணாநிதிக்கு ஒத்துழைப்போம்- வா.மு.சேதுராமன்
இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வா.மு.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலக தமிழ் மாநாடு நடத்தி 14 ஆண்டுகள் கழித்து, 10-ம் மாநாட்டை நடத்திட கருணாநிதி திட்டமிட்டிருப்பது கண்டு, உலகளாவிய தமிழ் பெருங்குடி மக்கள் பெருமிதம் அடைகின்றனர், வரவேற்கின்றனர். 14 ஆண்டுகளில் தமிழ் மொழி, தமிழர் வரலாற்றில் பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக இன்று தமிழர்கள் உலகில் 96 நாடுகளுக்கு மேலாக வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழர் தம் கலைகள் பண்பாடுகள், இலக்கிய வளர்ச்சி, பல்துறை தமிழர்கள் வளர்ச்சி, சமய வளர்ச்சிகள் வேரூன்றி வருகின்றன.
இவ்வாறாக உலகம் எங்கும் தமிழர் தம் பதிவுகள் தழைத்து வருவதை ஒரு முனைப்படுத்தி குவிக்க வேண்டிய பொறுப்பு உலகத்தமிழர் தாய் நிலமான தமிழகத்திற்கு, தமிழகத்தை ஆளும் முதல்-அமைச்சருக்கு உள்ளது.
14 ஆண்டுகால இடைவெளியில் கருணாநிதியின் அரிய, பெரிய இடைவிடா முயற்சியால் செம்மொழி தகுதி உயர்தனி செம்மொழி தமிழுக்கு இந்திய அரசு தர வேண்டும் என்று போராடி நோக்கத்தை வெற்றியடையச் செய்து காலம் வென்று நிலைக்கு கடமை ஆற்றியுள்ளார். கருணாநிதியின் சீரிய இம் முயற்சி இல்லையேல் இன்னும் ஈராயிரம் ஆண்டானால் கூடத் தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்குமா என்பது ஐயப்பாடே.
14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இம்மாநாட்டினை நடத்துவதற்குரிய முயற்சியினை மேற்கொள்ளாத, ஜப்பானிலுள்ள பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் நொபோரு கராசிமா, கருணாநிதியின் அன்பு வேண்டுகோளை ஏற்று மாநாட்டை ஓங்கு புகழ் பெருமாறு நடத்த ஒப்புதல் தந்திருக்க வேண்டும். உண்மை அறிந்து உறுதியாக அப்பேரறிஞர் ஒப்புதல் தந்து, கருணாநிதியின் பாராட்டினை உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பெரும் நிலை ஏற்படும் என நம்புவோமாக.
இன்று பல்வேறு சூழல்களால் உலகளாவிய தமிழர்கள் தயக்கத்தோடும், அச்சத்தோடும், அயர்வோடும் உள்ள நிலைகளை மாற்றிட, சோர்வினை அகற்றி சுடர் முகம் தூக்கிட கருணாநிதி அறிவித்துள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நல்வழிகாட்டும்.
தமிழ் செம்மொழி மாநாடு உலக மொழிகளோடு தமிழ் மொழி உயர்ந்து ஓங்குவதற்கும், உலக இனங்களோடு தமிழினம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் தமிழுக்கும், தமிழர்க்கும் வையகத்தில் ஒரு தனித்தன்மையை உருவாக்குவதற்கும் அடித்தளமாக அமையும்.
கருணாநிதியின் முயற்சி வெற்றி பெற உலகம் முழுவதும் உள்ள அனைத்து துறை அறிஞர்கள், தமிழ் அமைப்புகளும் ஒத்துழைப்போம் என்று அவர் கூறியுள்ளார்.