இந்திய-ஷார்ஜா கலாச்சார குழும நிகழ்ச்சி
ஷார்ஜா: ஷார்ஜாவில் முதன் முதலாக இந்தியா மற்றும் ஷார்ஜா இடையேயான முதலாவது வர்த்தக மற்றும் கலாச்சார குழுமத்தின் சார்பில் கலாச்சார நிகழ்ச்சி 18ம் தேதி பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சி ஷார்ஜா பட்டத்து இளவரசர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது பின் சுல்தான் அல் காஸிமி ஆதரவுடன் நடைபெற்றது. துபாய் இந்திய கன்சுலேட், ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி, ஷார்ஜா இந்திய பிஸினஸ் அன்ட் புரபஷனல் கவுன்சில் மற்றும் ஷார்ஜா இந்தியன் அசோஷியேஷன் உள்ளிட்டவை இணைந்து இதை நடத்தின.
நிகழ்ச்சிக்கு துபாய் இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி தலைமை வகித்தார். அவர் தனது உரையில், இந்தியா ஷார்ஜா இடையேயான பல்வேறு வர்த்தக மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.
ஷார்ஜா ஆட்சியாளர்கள் இந்திய வர்த்தகர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் தலைவர் அஹ்மது முஹம்மது அல் மித்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஷார்ஜா அமீரக வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியா ஷார்ஜா வர்த்தக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு தொடர எல்லாவிதமான ஒத்துழைப்பு நல்கப்படும் என்றார்.
அதனைத் தொடர்ந்து டாக்டர் மல்லிகா சாராபாய் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமீரக மற்றும் இந்திய மக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்தியன் அசோஷியேஷன் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற ஃடிபனி, சாபில், கிளிப்சால், கெஃப் ஹோல்டிங்ஸ் உள்ளிட்டவை ஆதரவு நல்கியிருந்தன.