மீசை இல்லாத ஆண்களை அதிகம் விரும்பும் இந்திய பெண்கள்!
விருமாண்டி, சீவலப்பேரி பாண்டி என கடா முடா மீசையுடன் வலம் வர விரும்பும் ஆண்கள்தான் தமிழகத்தில் அதிகம். மீசையை ஒட்ட வழித்து விட்டு ஷாருக் கான், சல்மான் கான் போல இருக்கும் ஆண்கள் இங்கு குறைச்சல்தான். மீசையுடன் இருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் பெரும்பாலும் விரும்புவார்கள் என்ற ஒரு வசனமும் ரொம்ப காலமாக இருக்கிறது. இது தமிழ்நாட்டுக் கணக்கு.
ஆனால் ஏசி நீல்சன் என்ற அமைப்பு இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஒரு சர்வேயை நடத்தியுள்ளது.
அதில் இந்த நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மீசை வைக்க அதிகம் விரும்புகிறார்களாம். ஆனால் நகர்ப்புறப் பெண்கள், மீசை இல்லாமல் இருக்கும் ஆண்களுக்குத்தான் முத்தம் கொடுக்க அதிகம் விரும்புகிறார்களாம்.
இந்தியாவின் எட்டு நகரங்களைச் சேர்ந்த ஆயிரம் ஆண், பெண்களைச் சந்தித்து இந்த 'அத்தியாவசிய' ஆய்வை நடத்தியுள்ளது ஏசி நீல்சன். சில நாட்களுக்கு முன்பு இதன் முடிவு வெளியிடப்பட்டது.
இதில், சுத்தமாக வழித்தெடுத்த ஆண்களுக்குத்தான் பெண்களின் ஓட்டு அதிகம் விழுந்துள்ளதாம்.
இந்தியா மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஆண்கள் பெரும்பாலானோர் அழகழகாக மீசை வைத்துக் கொள்ள விரும்புகிறார்களாம். இருப்பினும் நகர்ப்புற பெண்களுக்கு ஷேவிங் செய்த, மொழ மொழ ஆண்களைத்தான் அதிகம் பிடித்துள்ளதாம். அதேசமயம் தாடிக்கு பெரும்பாலானவர்கள் பெப்பே காட்டியுள்ளனர்.
சென்னையில் 83 சதவீதம் பெண்களும், மும்பையில் 72 சதவீதம் பெண்களும் நீ்ட்டாக ஷேவிங் செய்த ஆண்களுக்குத்தான் முத்தம் கொடுக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.
இது டெல்லி, கொல்கத்தாவில் வேறுபடுகிறது. முழு தாடியுடன் இல்லாமல், லேசான சொரசொரப்புடன் முகம் இருந்தால் பரவாயில்லை என்று 64 சதவீத மும்பை பெண்கள் தெரிவித்துள்ளனர். லேசான தாடியுடன் இருக்கும்போது ஆண்களுக்கு செமத்தியான செக்ஸ் அப்பீல் கிடைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்திய அளவில் 36 சதவீத ஆண்கள் மீசையுடன் உள்ளனர். முகத்தில் தாடி, மீசையுடன் இருப்பது பழைய ஸ்டைல் என்று 27 சதவீதம் பெண்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவின் பிற நகரங்களை விட டெல்லி (82%), மும்பை (72%), அகமதாபாத் (79%) ஆகிய இடங்களில்தான் ஆண்கள் அதிக அளவில் மீசை வைத்துக் கொள்வதில்லை.
சென்னையில் 56 சதவீதம் பேர் விதவிதமான மீசையுடன் உலா வருகிந்றனர்.
ஏன் ஷேவிங் செய்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நிறையப் பேர் முகம் சுத்தமாக இருக்கிறதே எனறு பதில் வந்துள்ளது. சென்னை, பெங்களூரில் இந்த கேள்விக்கு பார்க்க நன்றாக இருக்குமே என்று பதில் கிடைத்துள்ளது.
டெல்லி, சென்னை, அகமதாபாத்தில், இளமையாக தோன்ற ஷேவ் செய்வதாக கூறியுள்ளனர் ஆண்கள். லக்னோ, பாட்னாவில் சுகாதாரமாக இருக்குமே என்று பதிலளித்துள்ளனர்.
குஜராத்திகளும், தமிழர்களும் முகத்துக்கேற்ற வசீகரத்திற்கு மீசை வைப்பதாகவும், ஷேவ் செய்வதாகவும் கூறியுள்ளனர்.
இந்தியாவில் ஆண்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் குறைந்தது 6 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை சராசரியாக உள்ளது. அதேசமயம், சென்னை, பெங்களூர் ஆண்கள் ஷேவ் செய்ய ரொம்ப நேரம் எடுத்துக் கொள்கிறார்களாம்.
இவர்களுக்கு ஷேவ் செய்ய குறைந்தது அரை மணி நேரம் ஆகிறதாம். லக்னோக்காரர்கள் படு ஸ்பீடு. 5 நிமிடத்தில் வழித்தெடுத்து விடுகிறார்களாம். அதை விட குறைச்சலான நேரத்தில் ஷேவ் செய்கிறவர்களும் அங்கு உள்ளனராம்.
செல்ஃப் ஷேவிங் செய்கிறவர்கள் அகமதாபாத்திலும், பெங்களூரிலும்தான் அதிகம் உள்ளனர். மும்பை, கொல்கத்தா ஆண்கள் கடைக்குப் போய்தான் ஷேவிங் செய்து கொள்கிறார்களாம்.
இந்தியாவில் 90 சதவீத ஆண்கள் முழுமையாக ஷேவ் செய்து சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களாம். ஆனால் அதை நிறைவேற்றுவது 55 சதவீதம் பேர்தானாம்.
இந்தியப் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆண்கள் ஷேவ் செய்து, பளிச்சென இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாம். இந்தியாவில் ஷேவிங் செய்வோரின் சராசரி வாரத்திற்கு 3 முறையாக உள்ளது. இது கொரியா, ஜப்பானில் அதிகமாக உள்ளது.
நாட்டுக்குத் தேவையான, நல்லதொரு ஆய்வு இது, இல்லையா...?