தேசியப் பறவையான மயில்களை பாதுகாக்க பொதுநல வழக்கு
சென்னையை சேர்ந்த வக்கீல் ஞானேஸ்வரன் பொதுநலன் கருதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய நாட்டின் தேசிய பறவையான மயில்களை பாதுகாக்க நாட்டில் எந்த சிறப்பு திட்டமும் இல்லை. எவ்வளவு மயில்கள் உள்ளன என்பதற்கு சர்வே கூட மேற்கொள்ளவில்லை.
வனப்பாதுகாப்பு சட்டம் முதலாவது அட்டவணைப்படி புலிகளுக்கு இணையாக மயில்களையும் பாதுகாக்க வேண்டும். இந்த பறவையை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
மயில்கள் வசிக்கும் பகுதிகளில் வேலிகள் இல்லை. அவற்றுக்கு தேவையான உணவுகளை மற்ற விலங்குகள் சாப்பிட்டுவிடுகின்றன. சட்டவிரோதமாக மயில் இறகுகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். மயில்கள் வேட்டையாடப்படுகின்றன.
விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க மயில்களுக்கு விஷத்தை வைத்து சாகடிக்கிறார்கள். எனவே, மயில்களை பாதுகாக்க திட்டங்களை உருவாக்க வேண்டும். எவ்வளவு மயில்கள் உள்ளன என்பதை கணக்கெடுக்க வேண்டும். அதிகம் மயில்கள் உள்ள பகுதிகளை சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுபற்றி ஜனவரி 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.