கழுதைகளுக்கு கெடா வெட்டி சலவைத் தொழிலாளர்கள் பூஜை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சலவை தொழிலாளர்கள், 20க்கும் மேற்பட்ட கழுதைகளுக்கு கெடா வெட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ளது மாதேப்பட்டி. இங்கு துணி சலவை செய்யும் தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள பொதுமக்களின் துணிகளை கழுதைகள் மூலம் எடுத்து வந்து ஆற்றில் துவைத்து தருகிறார்கள். இதற்கு கூலியாக நெல் மற்றும் விவசாய பொருட்களை பெற்றுக்கொள்கின்றனர்.
இவர்கள், தங்களின் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கழுதைகளை கார்த்திகை மாதம் இறுதி வாரத்தில், அந்த பகுதியில் உள்ள எல்லம்மாள் கோவில் அருகே வரிசையாக நிறுத்தி வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டும், மாதேப்பட்டி சலவை தொழிலாளர்கள், தங்களுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட கழுதைகளை எல்லலம்மாள் கோவில் அருகே நிறுத்தி வைத்து ஆடு வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.