பருவமழையால் பரவும் மர்ம காய்ச்சல்- நிலவேம்பு கஷாயம் விற்பனை படுஜோர்
பருவ மழை தொடங்கியதில் இருந்து வைரஸ் மற்றும் மர்ம காய்ச்சலின் தாக்கம் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக நெல்லை, பாளை, மேலப்பாளையம் பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
சித்த மருத்துவத்தில் இதுபோன்ற மழை கால நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் நிலவேம்பு குடிநீர் மூலிகை கஷாயம் பாளை சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணிவரை இலவசமாக வழங்கப்படுகிறது.
தற்போது சித்த மருந்து கடைகளிலும் நிலவேம்பு குடிநீர் கஷாய பாக்கெட் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு பாக்கெட் ரூ.40 க்கு விற்கப்படுகிறது.
பாளை பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்து கடையில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 300 பாக்கெட் விற்பனையாகியுள்ளது. இது போல் பிற மருந்து கடைகளிலும் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இந்த மூலப்பொருளை தேயிலை போன்று தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து நாள் ஓன்றுக்கு மூன்று வேலை குடித்து வந்தால் நாளடைவில் மர்ம காய்ச்சலும், அதனால் ஏற்படும் கடுமையான உடல் வலியும் குணமாகும் என கூறப்படுகிறது.
மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி:
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவர் நாராயணபுரம் ஊராட்சியில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் ஷீலா (3). கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் காரணமாக ஷீலாவை ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேற்று ஷீலாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவளை மேல்சிகிச்சைக்காக நெல்லைக்கு அழைத்து செல்லும்படி டாக்டர்கள் கூறினர். இதையடுத்து சிறுமியை நேற்று நெல்லை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் வழியிலேயே அவள் இறந்தாள்.
கடந்த வாரம் இதே ஊரை சேர்ந்த இருளப்பன் மனைவி பால்தாய் மர்மக்காய்ச்சலுக்கு பலியானார்.