விவேகானந்தர் பிறந்த தினம்-மதுக் கடைகளை மூட கோரிக்கை
சென்னை: சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ம் தேதி மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர். இந்தியா ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த பண்டைய நாடு என உலகிற்கு உணர்த்தியவர்.
இன்றைக்கு இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஆன்மிகம் அறிந்த இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரை தங்களது ஆதர்ச நாயகனாக பார்க்கிறார்கள்.
இதைக் கண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதியை தேசிய இளைஞர் தினமாக அறிவித்தார்.
ஆனால், இன்று தமிழகத்தில் மது அருந்துவோரில் 95 சதவீதம் இளைஞர்களாக உள்ளனர். எனவே சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளன்று மதுக்கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆங்கில மன்னர்கள் சிலை அகற்றம்-பாஜக வரவேற்பு:
இந் நிலையில் பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை அண்ணா சாலையில் புதிதாக அமைய உள்ள தலைமைச் செயலகத்துக்கு அருகே உள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மற்றும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ஆகிய இருவருடைய சிலைகளும் அப்புறப்படுத்தப்பட்டு அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளன.
ராஜாஜி முதல்வராக இருந்தபோது, இதுபோல இருந்த சிலைகளை அப்புறப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
நாடு விடுதலை பெற்ற சமயத்திலேயே செய்திருக்க வேண்டிய பணியை இப்போதாவது செய்கிறார்களே என மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.