காந்தி கண்ணதாசனுக்கு கருணாநிதி கண்டன கடிதம்
சென்னை: கண்ணதாசனின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது மகன் காந்தி அறிக்கை வெளியிட்டதற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் கவிஞர் கண்ணதாசன் உள்பட 28 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந் நிலையில் காந்தி கண்ணதாசனுக்கு முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதம்,
அன்புள்ள தம்பி காந்தி கண்ணதாசனுக்கு,
காந்தியின் பெயரையும் வைத்துக் கொண்டு- என்னுடைய அருமை நண்பன் கண்ணதாசன் பெயரையும் வைத்துக் கொண்டு ஏடுகளில் இப்படியொரு அறிக்கை விடுவாய் என்று நான் கருதவில்லை.
கண்ணதாசன் நூல்களை நாட்டுடைமையாக்குவது என்று அரசாங்கம் அறிவித்தது- அந்தக் கவிஞனை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக, நான் என் நண்பன் பால் கொண்ட அன்பின் காரணமாகச் செய்யப்பட்டது.
அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லாவிட்டால், அதனை அரசுக்குத் தெரிவிப்பதும் பலமுறை நடைபெற்ற நிகழ்ச்சிகள்தான். கண்ண தாசனை மதிக்கும் பலர் அந்த அறிவிப்புக்காக தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தார்கள்.
குறிப்பாக கவிப்பேரரசு தம்பி வைரமுத்து, நிதி நிலை அறிக்கையைப் பார்த்தவுடன் கண்ணதாசன் பற்றிய அறிவிப்புக்காகவே எனது உதவியாளர் மூலம் தொலைபேசியில் நன்றி கூறினார்.
கண்ணதாசன் என்ற கவிஞனை மதிப்பதற்காக அரசின் சார்பில் செய்யப்பட்ட செயல் அது. அதற்காக இப்படியொரு அறிக்கை அந்தக் குடும்பத்தின் சார்பில் வெளிவரும் என்று எதிர்பார்க்கவில்லை.
உன்னுடைய அறிக்கைக்கு சின்னக்குத்தூசி விரிவாக பதில் எழுதியுள்ளார்.
எழுத்தாளர்களுக்கும், பதிப்பகத்தாருக்கும் என் சொந்தப் பொறுப்பில் ஒரு கோடி ரூபாய் அளித்தபோது, அந்தச் சங்கத்திற்கு நீ தலைவராக இருக்கிறாய், அந்தச் செயல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் பேரிலே தான் செய்தேன்.
அது முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கை இப்போதும் எனக்குண்டு. ஆனால் கண்ணதாசன் நூலினை நாட்டுடைமையாக்கியது குறித்து இப்படி நீ நடந்து கொண்ட முறையைக் கண்டு சலித்துப் போய் விட்டேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.