சீனியர் இந்தியாவுக்கும் அப்துல் கலாம்தான் 'ரோல் மாடல்'!

மக்கள் ஜனாதிபதி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் அப்துல் கலாம். படு துறுதுறுப்புடனும், விறுவிறுப்புடனும் அவர் ராஷ்டிரபதி மாளிகையை அலங்கரித்த அந்த நாட்கள் நாட்டு மக்கள் மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை.
ராஷ்டிரபதி பவனோடு முடங்கிப் போய், ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியாக செயல்படாமல், நாடு முழுவதும் உலா வந்து மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை விதைத்தவர் கலாம்.
நேருவுக்குப் பின்னர் ஒட்டுமொத்த இந்தியாவின் அன்பையும், ஆதரவையும் பெற்ற ஒரே தலைவர் அப்துல் கலாம் மட்டுமே என்று அப்போதைய சர்வேக்கள் கூறின.
மாணவர்கள், சிறார்கள் ஆகியோரிடம் தனிப் பாசம் காட்டும் அப்துல் கலாம், அவர்கள் மத்தியில் மிகப் பெரிய ரோல் மாடலாக, ஹீரோவாக திகழ்கிறார்.
இந்த நிலையில் நாட்டின் மூத்த குடிமக்கள் மத்தியிலும் அப்துல் கலாம் தான் அசைக்க முடியாத ஹீரோவாக விளங்குகிறார் என்பது புதிய கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் 60வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக, ஜிஎப்கே மோட் நிறுவனம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தியாவின் இந்த 60வது குடியரசு தினத்தின்போது உங்களது ரோல் மாடலாக யாரைக் கருதுகிறீர்கள் என்பதுதான் கேள்வி.
அதற்கு கிடைத்துள்ள பதிலில் அப்துல் கலாம்தான் மிக உயரத்தில் இருக்கிறார். ராகுல் காந்தி, அமிதாப் பச்சன், ரத்தன் டாடா போன்றோரெல்லாம் ரொம்ப தூரத்தில் பின் தங்கியுள்ளனர்.
நாட்டின் அனைத்துப் பகுதியிலும் கலாமுக்கு மூத்த குடிமக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.
சிறு நகரங்கள், பெரு நகரங்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் கலாமே முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதிலும், அதிக வாக்கு வித்தியாசத்தில் என்பது முக்கியமானது.
நாட்டின் தென் பகுதியில், 73 சதவீத ஆதரவு கலாமுக்குக் கிடைத்துள்ளது. ராகுல் காந்தி, ரத்தன் டாடா, கிரண் பேடி ஆகியோர் மிக பின்தங்கிய நிலையில் 2, 3 மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்து்ளனர்.
ஆண்களிடையே கலாமுக்கு 39 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. ராகுல் காந்திக்கு கிடைத்துள்ள ஆதரவு வெறும் 14 சதவீதம்தான். டாடாவுக்கு 9 சதவீத ஆதரவு.
மூத்த பெண்மணிகள் மத்தியில், கலாமுக்கு 36 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. ராகுல் காந்திக்கோ வெறும் 12 சதவீத ஆதரவுதான். அதை விட அவர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். கிரண் பேடிக்கு இங்கு 15 சதவீத ஆதரவு கிடைத்து 2வது இடத்தில் உள்ளார்.
சிறு நகரங்களைப் பொறுத்தவரை கலாமுக்கு 28 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. ராகுல் காந்திக்கு 21 சதவீத ஆதரவும், டாடாவுக்கு 12 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.
பெரிய நகரங்களில் கலாமுக்கு 39 சதவீத ஆதரவும், ராகுல் காந்திக்கு 14 சதவீதமும், பேடிக்கு 11 சதவீதமும் கிடைத்துள்ளது.
காஸ்மோபாலிடன் சிட்டி எனப்படும் பெருநகரங்களில் காங்கிரஸின் இளவரசனாக வர்ணிக்கப்படும் ராகுல் காந்தியை கலாம் கிட்டத்தட்ட 30 சதவீத வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளியுள்ளார் கலாம்.
இங்கு அவருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 40 சதவீதமாகும். ஆனால் ராகுலுக்கோ வெறும் 11 சதவீத ஆதரவே காணப்பட்டது. கிரண் பேடி 9 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலிக்கு கொல்கத்தா மக்களிடம் நல்லாதரவு காணப்படுகிறது. அவருக்கு ஆதரவாக 24 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications