திருப்பதியில் மகா விரைவு தரிசன முறை ரத்தானது
திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோவிலில் அமலில் இருந்து வந்த மகா விரைவு தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க செல்லும் பக்தர்கள் 3 விதமான தரிசனத்தை சந்திக்க வேண்டியுள்ளது. அதாவது நீங்கள் விஐபியாக இருந்தால், கருவறை வரை சென்று பகவானை தரிசிக்கலாம். அதாவது ஏழுமலையான அருகில் போய் தரிசித்து விட்டு வரலாம்.
சாதாரணர்கள் என்றால் வரிசையில் காத்து நின்றுதான் தரிசிக்க முடியும். இதிலும் 2 விதமான முறையை அமல்படுத்துகிறது திருப்பதி கோவில். அதாவது பக்தர்கள் கூட்டம் 45,000க்கு மேல் போகும்போது ஸ்பீட் எனப்படும் விரைவு தரிசனம் அமல்படுத்தப்படும். அதன்படி, ஜெயவிஜயர்கள் இருக்கும் 3வது வாயிலுக்கு வெளியே நின்றபடி ஜஸ்ட் சில விநாடிகள் வரை வெங்கடாசபதியை பார்த்து கும்பிட்டு விட்டு போய் விட வேண்டும்.
பக்தர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கு மேல் போனால் மகா விரைவு தரிசனம் நடைமுறைப்படுத்தப்படும். அதாவது சாமியை பார்த்ததும் அப்படியே நகர்ந்து விட வேண்டும். கும்பிடக் கூட போதுமான அவகாசம் இல்லாமல் அங்கு நிற்கும் பாதுகாவலர்கள் பக்தர்களை பிடித்து நகற்றி விட்டு விடுவார்கள்.
இந்த மகாத விரைவு தரிசன முறை பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நீண்ட தொலைவில் நின்று எப்படி பகவானை தரிசிக்க முடியும் என்று பக்தர்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது புதிய திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பேற்ற சத்யநாராயணா தலைமையிலான குழு கூடி ஆலோசித்து மகா விரைவு தரிசன முறையை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது.
நேற்று முதல் இந்த மகா விரைவு தரிசன முறை ரத்து அமலுக்கு வந்துள்ளது. இதனால் பக்தர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.