அந்தோணியார் திருவிழா - ராமேஸ்வரம் மக்கள் கச்சத்தீவு கிளம்பினர்
கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் அந்தோணியார் திருவிழா கடந்த 1978ம் ஆண்டு தடைபட்டது. உள்நாட்டுப் போரால் திருவிழா நடத்த விடாமல் தடுத்து விட்டது இலங்கை அரசு.
அதன் பின்னர் கடந்த 2001ம் ஆண்டு நடந்தது. அது 2005 வரை தொடர்ந்து நடந்து வந்தது. பின்னர் மீண்டும் 2006ம் ஆண்டு மீண்டும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையில் தற்போது போர் ஓய்ந்துள்ளதைத் தொடர்ந்து இந்த ஆண்டு திருவிழா நாளை நடைபெறுகிறது.
இதில் வட இலங்கையைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள். அதேபோல தமிழகத்திலிருந்தும் விழாவுக்கு வருமாறு கோரி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், கச்சத்தீவு திருவிழாவுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்தர்கள் கச்சத்தீவு விழாவில் கலந்து கொள்ள இலங்கை அரசும், மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளன.
இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. மாலையில் திருப்பலி பூஜை, இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாளை காலை திருப்பலி, தேர்பவனி நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள படகுகள் மூலம் தமிழக மக்கள் கச்சத்தீவு கிளம்பினர். பாம்பன், மண்டபம், தங்கச்சி மடம் மற்றும் அருகில் உள்ள தீவு பகுதி மக்கள் ராமேஸ்வரம் வந்தனர்.
நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில், குடும்பத்தோடு ஆர்வமாக புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். முன்னதாக தனித்தனியாக சோதனை நடத்தப்பட்டது. ஒரு படகில் அதிகப்பட்சம் 35 பேர் மட்டும் அனுவுமதிக்கப்படுவர்.
விசைப்படகு இந்திய- இலங்கை சர்வேதேச எல்லையை சென்றடைந்ததும், இங்கு இந்திய, இலங்கை கடற்படையினர் பக்தர்களிடம் சோதனை நடத்துவர். அடையாள அட்டை முக்கியமாக பரிசோதிக்கப்படும்.
2 நாட்கள் விழாவை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் ராமேஸ்வரம் திரும்புகின்றனர். விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.