புதிய சட்டசபை கட்டிடம்: உறுதியில் நம்பர் 1- அதிகாரிகள் உத்தரவாதம்

சென்னையில் தமிழக புதிய சட்டசபை கட்டிடப் பணிகள் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி தொடங்கியது. கடந்த நவம்பர் 11ம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.
ஒட்டுமொத்த பணிகளை வரும் மே மாதும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை புதிய சட்டசபை கட்டிடத்தில் தாக்கல் செய்ய முதல்வர் கருணாநிதி விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதனால் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக் கட்டமாக உள் அலங்கார வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வரும் 13ம் தேதி புதிய சட்டசபை கட்டிடம் திறக்கப்பட உள்ளது.
புதிய கட்டிடத்தில் அடுத்த நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் வரும் 19ம் தேதி தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய சட்டசபை கட்டிடம் அவசர கதியில் கட்டப்படுவதாகவும், இதனால் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புகார் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம் குறிப்பிடுகையில்,
'தமிழக புதிய சட்டசபை கட்டிடத்தின் உறுதித்தன்மை பற்றி மக்களுக்கு தெரிவிக்க வேண்டியுள்ளது. புதிய சட்டசபை கட்டிடம் ரூ.450 கோடி செலவில் சுமார் 9 லட்சம் சதுர அடியில் 6 மாடிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
இதில், தரைத்தளம் மற்றும் முதல்தளம் கட்டுமானப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு உள்அலங்காரத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கட்டுமானப் பணிகள் தாமதமாக நடந்துள்ளதே தவிர அவசர அவசரமாக முடிக்கப்படவில்லை. பெரிய பீம்கள் கட்டும்போது கான்கிரீட் கலவை அதிகமாக சூடாகி விடாமல் இருப்பதற்காக அதில் ஆயிரம் டன் ஐஸ்கட்டிகளைப் போட்டு கான்கிரீட் போடப்பட்டு உள்ளது.
இதனால் கட்டிடத்தில் எந்தக் காலத்திலும் விரிசல் ஏற்படாது. தமிழ்நாட்டில் முதன்முறையாக அரசு கட்டிடங்களில் இந்த நவீன முறை பின்பற்றப்பட்டு உள்ளது.
கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு முக்கியம். அதில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அதனால் கட்டுமானப் பணியின் பாதுகாப்பு குறித்து 3 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
புதிய சட்டசபை கட்டிடத்தை கட்டும் கட்டுமான கம்பெனி பொறியாளர்கள், தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த கட்டிட கட்டுமான பொறியாளரும், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியரும், சென்னை ஐஐடி கௌரவப் பேராசிரியருமான சாந்தகுமார் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது சில திருத்தங்களைச் செய்யும்படி சாந்தகுமார் கேட்டு கொண்டார். அதன்படி செய்தபிறகும் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டார். இதன் காரணமாகத் தான் கட்டுமானப் பணிகளை முடிக்க 3 மாதங்கள் தாமதமாகி விட்டது.
ஏற்கனவே உள்ள முறையில் ஒருதளத்தை கட்டி முடிக்க 28 நாட்கள் முதல் 30 நாட்கள் ஆகும். ஆனால், புதிய சட்டசபை கட்டிடம் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படுவதால் ஒருதளம் கட்டி முடிக்க 7 நாட்கள் முதல் 10 நாட்கள்தான் ஆனது.
இந்தியாவில் எந்த கட்டிடத்திலும் இல்லாத அளவுக்கு புதிய சட்டசபை கட்டிடம் மிகவும் உறுதியாக உள்ளது. இந்தியாவில் எங்கும் இல்லாத புதிய வடிவமைப்பாக இந்த கட்டிடம் இருப்பதால் மற்ற கட்டிடங்களுக்கு முன் உதாரணமாக விளங்கும்' என்றார்.
சட்டசபை வளாகத்தில் 'பப்ளிக் பிளாசா':
'ஆயிரம் சதுர அடியாக இருந்தாலும், லட்சம் சதுர அடியாக இருந்தாலும் கட்டிடம் திறப்பு விழாவுக்கு முந்தைய 15 நாட்கள் வேலைகள் மும்முரமாக நடப்பது வழக்கம். அதற்காக அவசர அவசரமாக தரமில்லாமல் வேலை நடக்கிறது என்று கூறுவது தவறாகும்' என்று கூறிய ராமசுந்தரம்,
'புதிய சட்டசபை கட்டிட கட்டுமானப் பணிகளை முதல்வர் கருணாநிதி 100 தடவையாவது வந்து பார்த்திருப்பார். அவர் வெறுமனே பார்த்துவிட்டு செல்ல மாட்டார். அவ்வப்போது ஆலோசனை வழங்குவார். அதன்படியே பணிகள் நடக்கின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுக்கான கட்டிடம் தான் சட்டசபை. அந்த சட்டசபையை வளாகத்தை மக்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்து செல்ல வசதியாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த சட்டசபை வளாகத்திலே பப்ளிக் பிளாசா' கட்டப்பட்டு உள்ளது. இது, திறந்தவெளி பூங்கா போல இருக்கும். சட்டசபை வளாகத்தில் பப்ளிக் பிளாசா'தான் அதிக பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு பொதுமக்கள் வந்து செல்ல கெடுபிடிகள் இருக்காது. போலீஸ் அனுமதியுடன் வந்து செல்லலாம். மாலை நேரத்தில் வந்து சட்டசபை கட்டிடத்தின் அழகை ரசித்தபடி அமர்ந்திருக்கலாம்.
ஆனால், சட்டசபைக்குள் செல்வதென்றால் அதற்கான அனுமதி சீட்டைப் பெற வேண்டும். இந்தியாவில் வேறு எந்த அரசுக் கட்டிடத்திலும் பப்ளிக் பிளாசா' இல்லை.
புதிய சட்டசபை கட்டிடத்தில் மொத்தம் ஆயிரம் அறைகள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் 150 முதல் 160 அறைகள் வரை இருக்கும்.
சட்டசபைக்கு மேல்பகுதியில் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்பட இருக்கும் குவிமுக மாடம் (டோம்) ஆயிரம் டன் எடை கொண்டது. பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு இதனை மிகுந்த எச்சரிக்கையுடன் அமைக்க வேண்டியுள்ளது.
அதனால்தான் திறப்பு விழாவை முன்னிட்டு தற்காலிக டோம்' அமைத்துள்ளோம். பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும் டோம்' அமைக்கும் பணி உடனடியாக தொடங்கும். வரும் மே மாதம் 11ம் தேதி புதிய சட்டசபை கட்டிடத்தின் 6 தளங்களும் முழுமையாக கட்டி முடிக்கப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications