தாமிரபரணியில் மணல் அள்ள உயர் நீதிமன்றம் தடை-நல்லகண்ணு வரவேற்பு
நெல்லை: தாமிரபரணியில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளக் கூடாது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுபாட்டு குழுத் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளத் தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மணல் அள்ளுவதை கண்காணிக்க உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 மண்டலங்களிலும் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது. இதுவும் வரவேற்கதக்கது.
தீர்ப்பை அமுல்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றத் தவறினால் தொடர்ந்து நாங்கள் இயக்கங்கள் நடத்துவோம்.
குவாரி நடந்த இடங்களில் பள்ளங்களை மூடவும், மணல் எடுத்துச் செல்ல போடப்பட்ட சாலைகளை அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அவ்விடங்களில் தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.
வீடு கட்ட மணல் தேவை என சிலர் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்புப் படி இனி அதற்கான அனுமதியை கலெக்டர்களும், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்து வழங்குவர். தடை விதிக்கப்பட்டதால் மணல் விலை ஏறி வருகிறது என்பதை ஏற்க முடியாது. அப்படியானால் சிமெண்ட் விலை கூட தான் இருமடங்கு ஏறி விட்டது. வெளி மாநிலங்களுக்கு ஆற்று மணலை கொண்டு செல்லக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications