கருணாநிதிக்கு நாளை அம்பேத்கர் விருது - விடுதலை சிறுத்தைகள் வழங்குகிறார்கள்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நாளை 'அம்பேத்கர் சுடர்' என்னும் விருது வழங்கப்படுகிறது.
நாளை அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழகமெங்கும் சிறுத்தைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது.
சென்னையில் காலை 9 மணி அளவில் கோயம்பேடு சந்தை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அத்துடன், கடந்த 2007ம் ஆண்டு முதல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் நடைபெறுகிறது.
இவ்விழாவில், தமிழக முதல்வர் கலைஞருக்கு அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை பாராட்டும் வகையில், 'அம்பேத்கர் சுடர்' என்னும் விருதும் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது. விழாவில் கலைஞர் கருணாநிதி உரையாற்றுகிறார்.
திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணிக்கு 'பெரியார் ஒளி' விருதும், கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு 'காமராசர் கதிர்' விருதும், கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு 'காயிதே மில்லத் பிறை' விருதும், ஞான அலாய்சியஸ்க்கு 'அயோத்திதாசர் ஆதவன்' விருதும் மறைந்த தமிழ் பேரறிஞர் தேவநேய பாவாணருக்கு 'செம்மொழி ஞாயிறு' விருதும் வழங்கப்படுகின்றன.
விருதுகளுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது. மாலை 4 மணியளவில் கலைநிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications