ஐன.3ல் அடையாறு பூங்காவைத் திறக்கிறார் பிரதமர்-ஸ்டாலின் தகவல்
சென்னை: 2011, ஜனவரி மாதம் 3-ம் தேதி சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை பிரதமர் மன்மோகன்சிங் திறந்துவைக்கிறார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவின் இறுதி கட்ட பணிகளை நேற்று மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியனும் வந்திருந்தார்.
பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அடையாறு ஓடை மற்றும் முகத்துவாரத்தில் 358 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் அடையாறு பூங்கா என்னும் சுற்றுச்சூழல் பூங்காவின் தொடக்க பணிகளை கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
அடையாறு ஓடை மற்றும் முகத்துவாரத்தை மறுசீரமைப்பதற்காக அரசு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கியது. பிச்சான்டிகுளம் காடு வளர்ப்பு ஆலோசகர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
நில மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் வருகை மற்றும் நெறிப்படுத்துதல் பகுதியில் அழகான பாறைகள் அடுக்குதல், கருங்கல்லில் செய்யப்பட்ட இருக்கைகள் அமைத்தல் மற்றும் வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. நீர் வழிகளை கடக்க 3 மரப்பாலங்களும், 1 இரும்புப் பாலமும் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
சாலைகள் மற்றும் நடைப்பாதைகள் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. பார்வையாளர்கள் பயன்படுத்தும் பகுதியில் கருங்கல் இருக்கைகள் பொருத்தும் பணியும், பசுமை வேலி அமைக்கும் பணிகளும் விரைவில் முடிக்கப்படும். மற்ற பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.
மேலும் இந்த இடம் நகரின் புனரமைப்பு பணிகளின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பு போன்ற தகவல்களை, பல்லாயிரக்கணக்கான மக்கள் தெரிந்துகொள்ளும் இடமாகவும் அமையும். எதிர்காலத்தில் நமது பூமியை பாதுகாக்கும் இளம் சந்ததியினரை உருவாக்க இந்த அடையாறு பூங்கா பெரும் அளவில் பயன்படும்.
இந்த பூங்காவி்றாகக இதுவரை ரூ. 18 கோடியே 74 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பூங்காப் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. மீதி இருக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இந்த பூங்காவை பிரதமர் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவிற்கு முதல்வர் தலைமை தாங்குகிறார்.
எஞ்சிய 300 ஏக்கருக்கான பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் அதற்கான பணிகளும் தொடங்கிவைப்பார்கள். அடையாறு சிற்றோடை புதுப்பித்தல் மற்றும் அடையாறு முகத்துவாரம் புனரமைப்பு பணிகள் குறித்த வரைவு பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதில் ஒரு பசுமை மையம் அமைக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications