பெரியாரின் குடியரசு தொகுதிகள் நாளை வெளியீடு!

இது குறித்து பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பெரியாரின் எழுத்து-பேச்சு மற்றும் அவரது நூல்களுக்கு எவரும் பதிப்புரிமை கோர முடியாது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு அமர்வு பெஞ்ச் வழங்கியிருக்கிறது.
கருத்துரிமைக்கும், பரப்புரிமைக்கும் கிடைத்த வெற்றியாகவே பெரியார் திராவிடர் கழகம் இதைக் கருதுகிறது.
பெரியார் நடத்திய குடியரசு வார ஏட்டில் வெளியான அவரது எழுத்து- பேச்சுகளை, கடுமையான உழைப்பில் 27 தொகுதிகளாகத் தொகுத்து, முன்பதிவுத் திட்டத்தின்
கீழ் நன்கொடை திரட்டி, சுமார் 11,000 பக்கங்களில் அச்சேற்றி வெளியிட இருந்தபோது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி, உயர்நீதிமன்றத்தில் அதற்கு தடை வாங்கினர்.
இந்த முட்டுக்கட்டையால் 2008ம் ஆண்டிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கை நாங்கள் சந்திக்க வேண்டியிருந்தது.
அச்சிடப்பட்ட நூல்களை பத்திரப்படுத்துவதே பெரும் சுமையாக இருந்தது. முன்பதிவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த தோழர்களும் இரண்டு ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
எங்கள் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து, வழக்கின் தீர்ப்புக்காக காத்திருந்த பெரியார் உணர்வாளர்களுக்கு நன்றி.
நீதியரசர் கே.சந்துரு அளித்த தீர்ப்பை மேல் முறையீட்டு அமர்வும் உறுதிப்படுத்தியிருப்பதால் பெரியார் நூல்களுக்கு இனி எந்த ஒரு தனி நபரும், ஏகபோக உரிமை கோர முடியாது என்பதே, இந்த வழக்கில் கிடைத்துள்ள வெற்றி. உண்மையில் பெரியார் சிந்தனைகளை பரப்புவதற்கான தடை நீக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தீர்ப்பை சமுதாயக் கவலையுள்ள அத்தனை பேரும் மகிழ்ச்சியோடு வரவேற்பது எங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.
தடைகளைக் கடந்து குடி அரசு தொகுதிகள் நாளை காலை 10 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிடப்படுகிறது.
11,000 பக்கங்கள் கொண்ட 27 குடியரசு தொகுதிகளுக்கும் 'ரிவோல்ட்' ஆங்கில தொகுதிக்கும் (பெரியார் 1928 முதல் 1930 வரை ஆங்கிலத்தில் நடத்திய இதழ்) சேர்த்து ரூ. 5,700 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், நூல் வெளியீட்டு நிகழ்வு நடக்கும் நாளில் இத்தொகுதிகள் ரூ. 4,500க்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
பெரியார் எழுத்துகளை வெளியிட தடை கிடையாது-வீரமணி:
இந் நிலையில் பெரியாரின் எழுத்து மற்றும் பேச்சுகளை புத்தமாக வெளியிட எப்போதும் தடை கிடையாது என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு இதழில் வெளிவந்த பெரியாரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களை பெரியார் திராவிட கழகம் புத்தகங்களாக வெளியிடுவதை எதிர்த்து திராவிட கழகத்தினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், பெரியாரின் படைப்புகளை புத்தகமாக வெளியிடுவதற்காக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரியாரின் படைப்புகளை அறக்கட்டளையின் அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் புத்தகமாக வெளியிடுவதற்கு எப்போதும் தடை கிடையாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications