தமிழக ஹஜ் யாத்ரீகர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: தமிழக ஹஜ் கமிட்டி தலைவர்
சென்னை: தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அகில இந்திய ஹஜ் வருடாந்திர மாநாடு நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, பிரபுல் பட்டேல், அகில இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் மொஷினா கித்வாய், இந்திய மற்றும் சவூதி அரேபிய வெளி விவகாரத்துறை, விமான போக்குவரத்துதுறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும், அகில இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவருமான அபூபக்கர் கூறியதாவது:
2010-ம் ஆண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள 12 ஆயிரத்து 83 பேர் விண்ணப்பித்தனர். அதில், 2 ஆயிரத்து 994 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹஜ் கமிட்டி விதிகளின்படி அவர்கள் தேர்வு செயயப்பட்டுள்ளனர். கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டால், இன்னும் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். இதற்கு மத்திய அரசு கூடுதல் இடங்களை ஒதுக்கி தர வேண்டும்.
ஹஜ் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் காலதாமதமின்றி விரைவில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். போலீசார் சோதனை நடத்தி அறிக்கை சமர்பிப்பதில் தாமதம் ஏற்படுத்தினால் தற்காலிக பாஸ்போர்ட் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் பாஸ்போர்ட்டுகள் 8 மாதங்கள் செல்லக்கூடியதாகவும், சவூதி அரேபியாவுக்கு மட்டுமே சென்று வருவதற்கு பயன்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
பயணிகளின் பயண நாள் மற்றும் நேரங்களை மாநில ஹஜ் கமிட்டிகளில் கலந்துகொண்டு தான் நிர்ணயிக்க வேண்டும். யாத்ரீகர்கள் தமிழகத்தில் இருந்து நேரடியாக ஜித்தாவிற்கு சென்று வர விமானங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
ஹஜ் பயணத்தின் போது தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகளுக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. ஏஜெண்டுகளின் திறமைக்கேற்ப ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீட்டு விவரங்களை மாநில ஹஜ் கமிட்டிகளோடு கலந்தாலோசித்த பிறகே அறிவிக்க வேண்டும்.
ஒதுக்கீட்டு முறையில் பாராபட்சம் இல்லாமல் இருக்க வெளிப்படையான ஒதுக்கீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications