செங்கல்தேரியை தொடர்ந்து களக்காடு தலையணைக்கும் செல்ல தடை
களக்காடு: செங்கல்தேரியை தொடர்ந்து களக்காடு தலையணைக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
களக்காடு புலிகள் காப்பகம் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் செங்கல்தேரி, குளிராட்டி, முதலிருப்பான், நெட்டேரியங்கால், தலையணை போன்ற பல இடங்கள் உள்ளன.
இதில் நெட்டேரியங்கால், குளிராட்டி பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல எப்போதுமே அனுமதி கிடையாது.
தலையணை, செங்கல்தேரி, முதலிருப்பான் பகுதிக்கு அனுமதி பெற்று சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர். இந்நிலையில் செங்கல்தேரி பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி நடப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செங்கல்தேரி செல்லும் சாலையும் மூடப்பட்டது. இதற்கிடையே களக்காடு தலையணை பகுதிக்கு செல்லவும் நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சத்தியநாதன் நிருபர்களிடம் பேசுகையில்,
களக்காடு மலையில் உள்ள தலையணை பகுதியிலும் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. தலையணைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி வாகனங்கள் செல்வதால் வனவிலங்குகள் மிரண்டு ஓடுகின்றன.
இதே நிலை நீடித்தால் வனவிலங்குகள் இங்கிருந்து இடம் பெயர்ந்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கும் பொருட்டு தலையணைக்கும் சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications