விஐடியில் பயிலும் வெளி மாநில மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தரப்படும்-வேந்தர் விஸ்வநாதன்
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், உலக சாதனைக்காக உருவாக்கப்பட்ட 6 அடி உயரம், 3 அடி அகலம், 1.25 டன் எடை கொண்ட திருக்குறள் நூல், விஐடி பல்கலைக்கழகத்துக்கு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த ஜி.விஸ்வநாதன் பேசுகையில்,
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், உலக சாதனையாக பெரிய அளவிலான திருக்குறள் நூலை சுமார் ரூ.5 லட்சத்தில் உருவாக்கியுள்ளது. இங்கு 45 நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.
பிற மொழிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிற மொழி மாணவ, மாணவியருக்கு தமிழ் கற்றுக் கொடுக்கவும், உரிய சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம்: விஜிபி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது உலகத்திலே பெரிய அளவிலான திருக்குறள் நூல் உருவாக்கப்பட்டது.
இந்த திருக்குறள் நூல் விஐடி பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படுகிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழர்கள் குடும்பத்தினருடன் தமிழில் பேச வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.
திருக்குறள் நூலை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன்: பைபிள், திருக்குர்ஆனுக்கு அடுத்தப்படியாக அதிகளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது திருக்குறள். 80 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றார்.