விஸ்வகர்மா சமூதாயத்தை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க கோரிக்கை
கரூர்: விஸ்வகர்மா சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் வேண்டும் என்று அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விசு. சிவக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று கரூரில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விசு. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் விஸ்வகர்மா சமுதாய மக்கள் பொருளாதாரத்திலும், கல்வி , வேலைவாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.
இதில், கருமார், கன்னார், சிற்பி, தச்சர், பொற்கொல்லர் தொழில் செய்யும் விஸ்வகர்மா சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
மேலும், தமிழகம் முழுக்க ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் எந்த ஜாதியினர் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் பின் தங்கிய சமூகத்திற்கு நன்மைகள் செய்ய முடியும்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினசரி துன்பத்திற்கு ஆளாகின்றனர். மீனவர்கள் கடலுக்குச் சென்றால் கரை திரும்புவது நிச்சயமற்ற செயலாக உள்ளது. இது மனித உரிமைக்கு எதிரான செயல்.
எனவே, மீனவர்களின் பாதுகாப்புக்கு என மத்திய மாநில அரசுகள் இணைந்து அவர்களுக்கு துப்பாக்கி வழங்கலாம். அதை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழுப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இது தான் அவர்களுக்கு முழுமையான தீர்வை தர முடியும் என்றார்.