மண்டல பூஜை: ஐயப்பன் கோவிலில் ஒரே நாளில் ரூ.1.80 கோடி வசூல்
திருவனந்தபுரம்: சபரிமலையில் முதல் நாள் வருமானம் ரூ.1.80 கோடியைத் தாண்டியது.
மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. நடை திறந்த அன்றே சபரி்மலையில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதையடுத்து அன்று இரவு ஒன்றரை மணி நேரம் தாமதமாக 11.30 மணிக்கே நடை சாத்தப்பட்டது.
கடந்த 17-ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. கார்த்திகை முதல் நாளன்றும், ஐயப்பனை தரிசிக்க இதுவரை இல்லாத அளவு பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் 14 மணி நேரம் காத்திருந்த பிறகு தான் ஐயப்பனை தரிசிக்க முடிந்தது.
பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த 17-ம் தேதி மட்டும் கிடைத்த வருமானம் ரூ.1 கோடியே 84 லட்சத்து 30 ஆயிரத்து 486. கடந்த வருடம் முதல் நாளில் கிடைத்த வருமானம் ரூ.1 கோடியே 28 லட்சத்து 540 ஆகும். கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு ரூ.55 லட்சத்து 63 ஆயிரத்து 946 அதிகம் கிடைத்துள்ளது.