கல்லறையில் கருத்துரிமை-சீமான் கைது குறித்து புதிய நூல்
சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கைது குறித்தும், இலங்கைத் தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் அவர் போராடியது குறித்தும் கல்லறையில் கருத்துரிமை என்ற பெயரில் ஒரு நூல் வெளியாகியுள்ளது.தமிழக மீனவர்கள் சிங்களப்படையால் தாக்கப்பட்டால் ஒரு சிங்களன் இனி தமிழ்நாட்டில் உயிருடன் நடமாட முடியாது",இந்திய அமைதிப்படை ஈழத்தில் எம் மக்களை துன்புறுத்தியது என்று சென்னையில் நடந்த தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைப் படையினரின் தாக்குதலை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது சீமான் பேசினார்.
இதையடுத்து அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சீமான்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சீமானின் விடுதலையை வலியுறுத்தி ஒரு நூல் பரபரப்பாக வெளிவந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் இதுகாறும் வரை கருத்துரிமை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக விளக்கும் கட்டுரைகளும், சீமானின் கைது சட்ட ரீதியாகவும் நியாயப்படியும் தவறு என நிரூபிக்கும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
மேலும் சீமான் தமிழக அரசால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் கைது செய்யப்படுவதற்கு காரணமான பேச்சு, மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி முன்பு இந்திய அமைதிப்படை குறித்து சட்டமன்றத்தில் எழுப்பிய கடுமையான விமர்சனங்களின் தொகுப்பு ஆகிய அனைத்தும் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
ரூ.50 விலையுள்ள சமூக விழிப்புணர்வு பதிப்பகத்தின் இந்த நூல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.