சாதனை படைத்த ஏழை மாணவர் இன்ஜினியரிங் சேரமுடியாமல் தவிப்பு
நெல்லை: ஏழ்மையிலும் சாதனை படைத்த பாளையங்கோட்டை பள்ளி மாணவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பாட பிரிவில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.
பாளைங்கோட்டை சிவன் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் லட்சுமணன். புக் பைண்டிங் செய்து வரும் இவர் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவசுப்பிரமணியன். பாளைங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்தார். பிளஸ்டூ அரசு பொது தேர்வி்ல் 1129 (கட் ஆப் மார்க் 196.50) மதிப்பெண்கள் பெற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. புரொடக்ஷன் இன்ஜினியரிங் பாட பிரிவில் இடம் கிடைத்தது. ஆனால் போதுமான நிதி வசதி இல்லாத காரணத்தினால் இதி்ல் சேர முடியாமல் மாணவர் சிவசுப்பிரமணியன் தவித்து வருகிறார்.
அதிக மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் வறுமையின் காரணமாக இன்ஜினியரிங் படிப்பை தொடர முடியாத நிலையில் இவர் உள்ளார். எனவே, மாணவர் சிவசுப்பிரமணியன் இன்ஜினியரிங் படிப்பி்ல் சேர்ந்து கல்வியை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அவரது தந்தை லட்சுமணன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். சிவசுப்பிரமணியனின் தங்கை கார்த்திகா 10-ம் வகுப்பு பொது தேர்வில் 486 மதிப்பெண்கள் பெற்று எம்.பி. கனிமொழியிடம் லேப்டாப் பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.