ரயில்கள் எண்கள் மாற்றம்-நெல்லையில் புதிய பெயர் பலகை பணி மும்முரம்
நெல்லை: ரயில்களின் எண்கள் 4ல் இருந்து 5 இலக்கமாக மாற்றப்பட்டதை அடுத்து நெல்லையில் புதிதாக பெயர் பலகை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நான்கு இலக்க ரயில் எண்களை 5 இலக்கமாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்களுக்கு முன் 1ம், பயணிகள் ரயில்களின் என்களு்ககு முன் 5ம் சேர்க்கப்பட்டுள்ளன.
இது கடந்த 20-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்பவர்கள் 5 இலக்க புதிய எண்களை குறிப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளில் புதிய எண்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளதால் ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லையை பொருத்தவரைக்கும் ஜம்முதாவி மற்றும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ்களின் பெயர் பலகை புதுக்கப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு ரயில் பெட்டியில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பெயர் பலகை ரயில் எண்களுடன் பொருத்தப்பட்டு இருக்கும். அவற்றை அகற்றிவிட்டு பழைய எண்கள் மற்றும் பெயர்கள் அழிக்கப்பட்டு புதிய எண்கள் எழுதப்பட்டு வருகிறது. இந்த பணியில் ரயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.