வா.சே. குழந்தைசாமிக்கு சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது
தினத்தந்தி அதிபர் சி.பா.ஆதித்தனார் நினைவாக ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளையொட்டி மூத்த தமிழறிஞர் விருது மற்றும் சிறந்த இலக்கிய நூலுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழறிஞருக்கான விருதுக்கு ரூ. 1.50 லட்சம் பரிசும், இலக்கிய நூலுக்கு ரூ. 1 லட்சமும் பரிசாக அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான இலக்கிய பரிசளிப்பு விழாவும்,சி.பா.ஆதித்தனாரின் 106-வது பிறந்த நாள் விழாவும், நேற்று மாலை 6 மணிக்கு, சென்னை, ராணி சீதை மன்றத்தில் நடந்தது. விழாவுக்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.மன்னர் ஜவகர் தலைமை தாங்கினார். தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.மன்னர் ஜவகர் தலைமை உரையாற்றினார். பின்னர், இந்த ஆண்டுக்கான சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது டாக்டர் வா.செ.குழந்தைசாமிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பி.மன்னர் ஜவகர் பொன்னாடை அணிவித்து, ரூ. ஒன்றரை லட்சத்துக்கான காசோலையையும், விருதையும் வழங்கினார்.
சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசை, கவிஞர் மு.மேத்தா பெற்றார். மு.மேத்தாவின் கவிதைகள் என்ற கவிதை நூலுக்கு இந்த பரிசு கிடைத்தது.
மு.மேத்தாவுக்கு பொன்னாடை அணிவித்து, ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், விருதையும் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் வழங்கினார்.