சித்தா டாக்டர்கள் அலோபதி மருத்துவம் பார்க்கலாம்: மதுரை ஐகோர்ட் உத்தரவு
மார்த்தாண்டம்: தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் சித்த மருத்துவம் படித்த டாக்டர்கள் தங்கள் மருத்துவத்துடன் ஆங்கில மருத்துவமான அலோபதி முறையில் சிகிச்சை அளிக்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
போலி டாக்டர்களை கைது செய்வதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் முழு அளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனியார் அசோசியேஷன் ஒன்று கொடுத்த தகவலின் பேரில் அரசு மருத்துவ கல்லூரியில் படித்து, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பிஎஸ்எம்எஸ் டாக்டர்கள் போலி டாக்டர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பிஎஸ்எம்எஸ் படித்த சித்தா டாக்டர்கள் ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு சித்தா டாக்டர்கள் அசோசியேஷன் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் விக்டோரியா கவுரி தொடர்ந்த இவ்வழக்கில், மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற சித்தா டாக்டர்களை போலி டாக்டர்கள் பட்டியலில் சேர்த்தது தவறு என்றும், அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் நீதிபதி ஜெயபால் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவின்படி மருத்துவ கல்லூரியில் படித்த சித்த மருத்துவ பட்டதாரிகள் தாங்கள் படித்த சித்த மருத்துவத்துடன் ஆங்கில மருத்துவமும் செய்யலாம். அறுவை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் மருத்துவம் ஆகியவையும் செய்யலாம். இவை அனைத்தும் இவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. ஆனால், சித்த மருத்துவர்கள் முழுமையான ஆங்கில மருத்துவம் செய்யக் கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.