திருமாலுக்கு நேர்ந்த பரிதாபம்-உறக்கம் கலைக்குமா தொல்பொருள் துறை?
விழுப்புரம்: திண்டிவனம் அருகே பாழடைந்து போய்க் கிடக்கிறது ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட திருமால் சிலை. இதைக் கவனித்து சீரமைக்குமா தொல்பொருள் ஆய்வுத் துறை என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது கீழ்மாவிலங்கை கிராமம். இந்த கிராமத்தில் பல்லவர் கால குடைத்தளி உள்ளது. ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட திருமால் சிலை அழகுடன் காட்சி தருகிறது.
ஏறக்குறைய 1200 ஆண்டுகள் முற்பட்ட இந்த பல்லவர் கால குடைத்தளி படைப்புச் சிற்பம் பாதுகாப்பு இன்றியும், பராமரிப்பு இன்றியும் உள்ளது. அங்குள்ள அடையாளம் காட்டும் வழி காட்டியும் துருப்பிடித்து கீழே விழும் நிலையில் உள்ளது. அங்கு செல்லும் வழியும் முற்செடிகள் மண்டிக்கிடக்கிறது.
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிற்பம், போதிய பாதுகாப்பு இன்றி இருப்பதால் அது தன் பெருமையை இழந்துவிடுமோ என வரலாற்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். உறக்கத்தில் இருந்து தொல்பொருள் ஆய்வுத்துறை விழுத்துக் கொள்ளுமா?