தண்டவாள விரிசலை காட்டி கொடுக்கும் நவீன கருவி: இன்ஜினியரிங் மாணவர் கண்டுபிடிப்பு
வி.கே.புரம்: ரயில் தண்டவாள விரிசலை காட்டும் நவீன கருவியை வி.கே.புரத்தை சேர்ந்த பொறியியல் மாணவர் உருவாக்கி உள்ளார்.
இந்தியாவில் ரயில் விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றது. தண்டவாள விரிசல், குண்டுவைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இவை நிகழ்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் சமீப காலமாக தினமும் ஏதாவது ஒரு இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விபத்து தவிர்க்கப்படுகிறது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் பொறியியல் மாணவர் ஒருவர் நவீன கருவியை உருவாக்கி உள்ளார். அது பற்றிய விபரம்,
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள அம்பலவாணபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துலெட்சுமி. இவர்களது மகன் ஹரிராம்சந்தர். இவர் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
இவர் தண்டவாள விரிசல் மற்றும் அதிர்வுகளை காட்டும் கருவியை உருவாக்கி உள்ளார். இந்த கருவியை தண்டவாளத்தின் ஓரத்தில் 5 மீட்டர் இடைவெளிக்கு ஒன்றாக பொருத்த வேண்டும். அதில் உள்ள சிக்னல் விளக்கு தண்டவாளத்தில் விரிசல் இருந்தால் அந்த வழியாக வரும் ரயில் ஓட்டுநருக்கும், தகவல் மையத்துக்கும் சிக்னல் கொடுக்கும். இதனால் விபத்தை தவிர்த்து விடலாம்.
இதே போல் தண்டவாளத்தில் யானை மற்றும் விலங்குகள் வந்தாலும் இந்த கருவி மூலம் தெரிந்து கொள்ளலாம். ரயில்வே கிராசிங்கில் வாகனங்கள் சிக்கினாலும் இந்த கருவி தெரிவித்து விடும். அதிகம் செலவு இல்லாத இந்த கருவியை பொருத்தினால் விபத்துகளை தடுக்கலாம் என மாணவர் ஹரிராம்சந்தர் தெரிவித்தார்.
ஏற்கனவே இவர் வி.கே.புரம் பள்ளியில் படிக்கும்போது மின்சாரத்தை கணக்கெடுக்கவும், அதற்கான பணத்தை செலுத்தவும் எளிய வழிமுறைகளை கண்டுபிடித்ததற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலமிடம் பாராட்டு பெற்றுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் சேவியர் அல்போன்ஸ் இவருக்கு இளம் விஞ்ஞானி என்ற பட்டம் வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications