குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு-சிக்கிய ஒருவர் பலி
ஏழைகளின் ஊட்டி என்று போற்றப்படும் குற்றாலம், பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமான மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும்.
தண்ணீரும், சாரலும் நிறைந்திருக்கும் காலமான இச்சமயத்தில் தென்மேற்கு பருவமழை வலுவடையாத காரணத்தால் குற்றாலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பகுதிகளில் தண்ணீர் இன்றி தவித்தனர். மேலும் அருவிகளுக்கு நிறைந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியும் நேற்று முன்தினம் வரை குறைவான அளவே தண்ணீர் விழுந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் பெய்ததால் அருவிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அருவி தடாகத்தில் ஸ்ரீவில்லிபுத்துரை சேர்ந்த ஒருவர் தவறி விழுந்து இறந்து போனார். அவரது உடலை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது குற்றாலத்தில் நல்ல சாரல் மழை வீசி வருகிறது. இதமான சூழல் நிலவுவதால் மெயினருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி என ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது.
ஆனால் வெள்ளப் பெருக்கு காரணமா குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், இன்று ஞாயிற்றுக்கிழமையன்று அங்கு வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.